என்னை மீண்டும் பிரதமர் ஆக்க மக்கள் முடிவு எடுத்து விட்டனர் - பிரதமர் மோடி


என்னை மீண்டும் பிரதமர் ஆக்க மக்கள் முடிவு எடுத்து விட்டனர் -  பிரதமர் மோடி
x
தினத்தந்தி 17 May 2019 2:31 PM GMT (Updated: 17 May 2019 2:31 PM GMT)

என்னை மீண்டும் பிரதமர் ஆக்க மக்கள் முடிவு எடுத்து விட்டனர் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலை முடிவடைந்தது.  கடைசி கட்ட தேர்தல் பிரசாரத்தை மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் நகரில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,  மீண்டும் மோடி அரசுதான் வரும் என்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, கட்ச் முதல் காம்ருப் வரை ஒட்டுமொத்த நாடும் சொல்கிறது.

இந்த தேர்தலில், 300 தொகுதிகளுக்கு மேல் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். என்னை மீண்டும் பிரதமர் ஆக்க முடிவு எடுத்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 130 கோடி மக்களின் விருப்பத்தேர்வு, பா.ஜனதா கூட்டணிதான். இந்த ஞாயிற்றுக்கிழமை நீங்கள் ஓட்டுப்போட போகும்போது, புதிய சரித்திரம் எழுதப்போகிறீர்கள். 

கடந்த சில பத்தாண்டுகளுக்கு பிறகு, தொடர்ச்சியாக 2–வது தடவையாக பெரும்பான்மை அரசை தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள். முந்தைய தேர்தல்களில் இருந்து இந்த தேர்தல் வேறுபட்டது. முன்பெல்லாம் இந்திய மக்கள் ஏதேனும் ஒரு கட்சிக்காக வாக்களிப்பார்கள். இந்த தேர்தலில் நாட்டுக்காக ஓட்டளிக்கிறார்கள். புதிய இந்தியாவை உருவாக்க ஓட்டுபோடுகிறார்கள் எனக் கூறினார். 

Next Story