மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - கருத்துக்கணிப்பு முடிவுகள்


மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - கருத்துக்கணிப்பு முடிவுகள்
x
தினத்தந்தி 19 May 2019 1:32 PM GMT (Updated: 19 May 2019 1:35 PM GMT)

மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் எனவும், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 34 தொகுதிகள் வரையில் கிடைக்கும் எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கு தேர்தல் தேதி மார்ச் மாதம் 10-ல் அறிவிக்கப்பட்டது.  இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. 7-வது இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைப்பெற்றது. தேர்தல் முடிந்த பின்னர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகிறது. 2018 இறுதியில் நடைபெற்ற 5 மாநில தேர்தல்களில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை பறித்தது. பா.ஜனதாவின் மதிப்பு சற்று சரிந்து காணப்பட்டது. 

எதிர்க்கட்சிகள் கூட்டணி வியூகம் என்ற நிலையில் வெளியான கருத்துக்கணிப்புக்கள் மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் அளவிற்கு போட்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரிச்சலுகை, விவசாயிகளுக்கு உதவித்தொகை உள்ளிட்ட கவர்ச்சிக்கரமான அறிவிப்பை வெளியிட்டது. இந்திய ராணுவமும் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதனையடுத்து பா.ஜனதாவின் செல்வாக்கு உயர்ந்து காணப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்படும் முன் வெளியான கருத்துக்கணிப்புக்கள் மத்தியில் பா.ஜனதாவிற்கு அதிகமான தொகுதிகள் வாய்ப்பு உள்ளது என தெரிவித்தது.

 பா.ஜனதா கூட்டணி ஆட்சியை அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மையை பெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் வெளியாகியுள்ளது. மத்தியில் மீண்டும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சியை அமைக்கும் என அந்த கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. 

டைம்ஸ் நவ்- விஎம்ஆர் கருத்துக்கணிப்பில் பா.ஜனதா கூட்டணி 306 தொகுதிகள் வரையில் வெற்றிப்பெறும் எனவும் காங்கிரஸ் கூட்டணி 142 தொகுதிகளில் வெற்றிபெறும் எனவும் பிற கட்சிகள் 94 தொகுதிகளில் வெற்றிப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிபப்ளிக் டிவி மற்றும் சி ஓட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் பா.ஜனதா கூட்டணி 287 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 128 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 127 தொகுதிகளிலும் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா கூட்டணிக்கே அதிகமான இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிறது.

தமிழகத்தில் திமுக கூட்டணியே ஆதிக்கம் செலுத்தும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இங்கு அதிமுக கூட்டணிக்கு 4 தொகுதிகளும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 34 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் திமுகவிற்கு 29 தொகுதிகளும், அதிமுக கூட்டணிக்கு 9 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story