தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
x
தினத்தந்தி 20 May 2019 1:10 AM GMT (Updated: 20 May 2019 1:10 AM GMT)

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் 1999-க்கு பிறகு பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

குண்டூர்,

மக்களவை தேர்தலுக்கான அனைத்து கட்ட வாக்குப்பதிவுகளும் நேற்றோடு நடந்து முடிந்தது, இதையடுத்து, நேற்று மாலை ஆங்கில தொலைக்காட்சிகள் பலவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. 

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பெரும்பான்மையானவை, மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்று அறிவித்தன. 

இந்த நிலையில், ஆந்திர மாநிலம், குண்டூரில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பற்றி கூறியதாவது:- “

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள், தேர்தலின் சரியான முடிவுகள் அல்ல. முதலில் நாம் அதைப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த 1999-ஆம் ஆண்டில் இருந்து பெரும்பாலான வாக்கு கணிப்புகள் தவறாகவே இருந்துள்ளன. ஜனநாயகம் வலுப்பட வேண்டுமெனில், மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமெனில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து கடமைகளை நிறைவேற்ற வேண்டும். 

அண்மைக் காலமாக, அரசியல் நாகரிகம் குறைந்து வருவது கவலையளிக்கிறது. அரசியல் தலைவர்களின் பேச்சுகளில் பண்பாடு சிதைந்துள்ளது. ஒருவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார்கள். அரசியலில் ஒருவருக்கொருவர் எதிரி அல்ல, எதிர்ப்பாளர் மட்டுமே. இந்த அடிப்படை உண்மையைக் கூட அவர்கள் மறந்து விட்டனர். 

இதேபோல், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் செயல்பாடுகளும், சட்டப்பேரவைகளில் எம்எல்ஏக்களின் செயல்பாடுகளும் கவலை அளிக்கிறது. அவர்கள், தாங்கள் சார்ந்துள்ள கட்சிக்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்துகொள்வதில்லை. நாட்டுக்கும், மாநிலத்துக்கும் திறன் மிக்க தலைவரும், நிலையான அரசும் அவசியம். யாராக இருந்தாலும் சரி, இதுதான் அவசியம்” என்றார். 


Next Story