குடிக்க தண்ணீரில்லை, 3 மகள்களுடன் தற்கொலை செய்கிறேன் பிரதமர் மோடிக்கு விவசாயி கடிதம்


குடிக்க தண்ணீரில்லை, 3 மகள்களுடன் தற்கொலை செய்கிறேன் பிரதமர் மோடிக்கு விவசாயி கடிதம்
x
தினத்தந்தி 16 Jun 2019 10:14 AM GMT (Updated: 16 Jun 2019 11:55 AM GMT)

குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லாத நிலையில் 3 மகள்களுடன் தற்கொலை செய்ய உள்ளேன், அனுமதியுங்கள் என விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா முழுவதும் வறட்சியால் மக்கள் தண்ணீருக்கு பெரிதும் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் உத்தரபிரதேச மாநில விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்கு தற்கொலை செய்ய உள்ளதாக கடிதம் எழுதியுள்ளார்.

உ.பி. ஹத்ராஸ் மாவட்டம், ஹசாயன் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரபால் சிங், அப்பகுதியில் உள்ள போர்வெல் கிணறுகளில் உள்ள தண்ணீர் குடிக்க முடியாத அளவு உவர்ப்பாக உள்ளதாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை. மக்கள் பெரிதும் இன்னலுக்கு உள்ளானார்கள். குடிநீர் பிரச்சினையால் அவதிப்பட்ட சந்தரபால் சிங் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லாத நிலையில் 3 மகள்களுடன் தற்கொலை செய்ய உள்ளேன், அதற்கு அனுமதியுங்கள் என விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், இங்கு குடிப்பதற்கு ஒருசொட்டு குடிநீர் கூட இல்லை.  என் மகள்களுக்கு குடிநீர் வழங்க முடியவில்லை. போர்வெல் கிணற்று நீர் மிகவும் உவர்ப்பாக உள்ளது. தண்ணீரை குடிக்க முடியவில்லை. எனவே என்னுடைய மகள்களுடன்  தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

சந்திரபால் சிங் பேசுகையில், எங்கள் பகுதியில் உள்ள போர்வெல்லில் இருந்து எடுக்கும் நீரை குடிக்க முடியவில்லை.  எங்கு சென்று என் மகள்கள் குடிநீரைக் குடித்தாலும் அதை குடிக்க முடியாமல் தூக்கி எறிந்துவிடுகிறார்கள். நீரில் உப்பு அதிகமாக இருப்பதால் விளைவிக்கப்பட்டிருந்த பயிர்களும் கருகிவிட்டன. தீர்வுகாண அதிகாரிகளிடம்  பலமுறை முறையிட்டும் பயனில்லை. எனவேதான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி விட்டேன் எனக் கூறியுள்ளார். 

கால்நடைகளும் இங்குள்ள நீரைக் குடிக்க மறுக்கின்றன. ஒரு குடம் குடிதண்ணீருக்காக நாங்கள் பல கிலோ மீட்டர் தொலைவு நடக்கிறோம் என அப்பகுதி கிராம மக்கள் வேதனையை தெரிவித்துள்ளனர். 

Next Story