தேர்தலுக்கு பின் முதல் கூட்டத்தொடர்: நாடாளுமன்றம் இன்று கூடுகிறது


தேர்தலுக்கு பின் முதல் கூட்டத்தொடர்: நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
x
தினத்தந்தி 17 Jun 2019 12:15 AM GMT (Updated: 16 Jun 2019 11:35 PM GMT)

தேர்தலுக்கு பின் நாடாளுமன்றம் இன்று முதன் முதலாக கூடுகிறது. இன்றும், நாளையும் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்கிறார்கள். இதையொட்டி, பிரதமர் மோடி நேற்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி சபையை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அபார வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30-ந் தேதி பதவி ஏற்றது.

அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் 31-ந் தேதி கூடிய மத்திய மந்திரிசபையின் முதல் கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17-ந் தேதி கூட்ட முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி இன்று (திங்கட்கிழமை) 17-வது நாடாளுமன்ற மக்களவை முதல் முறையாக கூடுகிறது. இன்றும், நாளையும் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பாரதீய ஜனதா கட்சி மூத்த எம்.பி. வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

19-ந் தேதி புதிய சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது.

15-வது மக்களவையில் சபாநாயகராக மீராகுமாரும், 16-வது மக்களவையில் சுமித்ரா மகாஜனும் பதவி வகித்ததால், 17-வது மக்களவை சபாநாயகர் பதவியும் பெண் தலைவர் ஒருவருக்கே வழங்கப்படுவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

அந்த வகையில், சபாநாயகர் பதவிக்கு பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி மேனகா காந்தி பெயர் அடிபடுகிறது; அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படலாம்.

20-ந் தேதி மாநிலங்களவை கூட்டம் தொடங்குகிறது.

அதே நாளில் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை ஆற்றுகிறார். அவர் புதிய அரசின் திட்டங்களை பட்டியலிட்டு பேசுவார்.

அதைத் தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக் கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடக்கும். விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுவார்.

அடுத்த மாதம் 4-ந் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். அதைத் தொடர்ந்து 5-ந் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மக்களவையில் தனது முதல் பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

இந்த பட்ஜெட் 2019-20 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டாக அமையும்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கடந்த பிப்ரவரி 1-ந் தேதி அப்போதைய நிதி மந்திரி பியூஸ் கோயல் இடைக்கால பட்ஜெட்டைத்தான் தாக்கல் செய்தார் என்பது நினைவு கூறத்தக்கது.

இப்போது 2024-ம் ஆண்டுக்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.350 லட்சம் கோடி) பொருளாதார நாடாக மாற்றுவதுதான் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசின் முக்கிய நோக்கம் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் முழு பட்ஜெட் அமையும் என்பதால் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த கூட்டத்தொடரில் ‘முத்தலாக்’ மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக் களை நிறைவேற்றுவதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது.

மக்களவை கூட்டத்தொடர் 30 அமர்வுகளைக் கொண்டிருக்கும். ஜூலை 26-ந் தேதி கூட்டத்தொடர் முடியும்.

கடந்த நாடாளுமன்ற மாநிலங்களவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இடம் பெற்றிருந்தார். அவர் இப்போது ஓய்வு பெற்று விட்டார். இதே போன்று கடந்த மக்களவையில் மற்றொரு முன்னாள் பிரதமர் தேவே கவுடா இடம் பெற்றிருந்தார். இப்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார். எனவே இவ்விருவரும் இல்லாமல் இந்த நாடாளுமன்றம் இயங்கும்.

அதே போன்று, கடந்த மக்களவையைப் போல இந்த மக்களவையிலும் பிரதான எதிர்க் கட்சி தலைவர் இருக்க மாட்டார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 10 சதவீத இடங்களை பெறத்தவறியதால், பிரதான எதிர்க்கட்சி தலைவர் பதவியை இந்த முறையும் பெற வாய்ப்பு இல்லை.

நாடாளுமன்றம் இன்று கூடுவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி சபையை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, ராஜாங்க மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சுதீப் பந்தோபாத்யாய், தீரக் ஓ பிரையன், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், முதல் முறையாகவும், மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாகவும் நாங்கள் இன்று (நேற்று) ஒரு பயனுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினோம். மதிப்புமிக்க யோசனைகள் கூறிய தலைவர்களுக்கு நன்றி. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய வகையில், நாங்கள் அனைவரும் நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவதற்கு ஒப்புக்கொண்டோம்” என கூறி உள்ளார்.


Next Story