ஒரு தேசம், ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு பிரதமர் மோடி குழு அமைப்பு


ஒரு தேசம், ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு பிரதமர் மோடி குழு அமைப்பு
x
தினத்தந்தி 19 Jun 2019 3:44 PM GMT (Updated: 19 Jun 2019 3:44 PM GMT)

ஒரு தேசம், ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு பிரதமர் மோடி குழுவை அமைப்பதாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும், ‘ஒரு நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி  தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. கூட்டத்தில் கலந்துகொண்ட  எதிர்க்கட்சி தலைவர்களும், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களை நடத்துவது சாத்தியம் இல்லை என்றும், நடைமுறை சிக்கல்கள் பல உள்ளன என்றும் கூறியுள்ளனர். முடிவில் இத்திட்டம் தொடர்பாக  ஆராய்வதற்கு ஒரு குழுவை அமைப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

கூட்டம் முடிந்த உடன் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேசுகையில், கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள் பலவும் ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பதற்கு ஆதரவு தெரிவித்தன. இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட சில கட்சிகள் இதை நடைமுறைப்படுத்துவது குறித்து தங்களது கவலைகளை தெரிவித்தன, ஆனால் நேரடியான எதிர்ப்பு கிடையாது எனவும் குறிப்பிட்டார். இருப்பினும், இது தொடர்பான பிரச்சினைகளை பிரதமர் மோடி அமைக்கிற குழு ஆராயும் எனவும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் 2022–ம் ஆண்டு நாட்டின் 75–வது சுதந்திர தினத்தை கொண்டாடுவது குறித்தும், மகாத்மா காந்தியின் 150–வது பிறந்த நாளை நாடு முழுவதும் கொண்டாடுவது பற்றியும் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story