லிட்டருக்கு ரூ.1 கூடுதல் வரி பெட்ரோல், டீசல் விலை உயருகிறது


லிட்டருக்கு ரூ.1 கூடுதல் வரி பெட்ரோல், டீசல் விலை உயருகிறது
x
தினத்தந்தி 5 July 2019 1:49 PM GMT (Updated: 5 July 2019 7:36 PM GMT)

பட்ஜெட்டில், லிட்டருக்கு ரூ.1 வரி உயர்த்தப்பட்டதால், பெட்ரோல், டீசல் விலை உயருகிறது.

புதுடெல்லி,

பெரும்பாலான பொருட்கள், சரக்கு–சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டாலும், பெட்ரோல், டீசல் போன்ற ஒருசில பொருட்கள் இன்னும் மறைமுக வரி விதிப்பின் கீழேயே உள்ளன.

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. எனவே, வழக்கம்போல், அவற்றின் மீது உற்பத்தி வரி விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி அறிவித்தார்.

பெட்ரோல், டீசல் மீது சிறப்பு கூடுதல் உற்பத்தி வரி மற்றும் சாலை வசதிக்கான கூடுதல் வரியை லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்துவதாக அவர் அறிவித்தார். தற்போது, கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால், உற்பத்தி வரியை உயர்த்தும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக அவர் கூறினார்.

சிறப்பு கூடுதல் உற்பத்தி வரி மற்றும் சாலை வசதிக்கான கூடுதல் வரி உயர்த்தப்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய்க்கு மேல் உயரும். பெருநகரங்களுக்கு ஏற்ப விலை உயர்வில் சற்று மாறுபாடு இருக்கும்.


Next Story