150 உறுப்பினர்கள் என்னிடம் உள்ளனர், எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள்; ஜெகன்மோகன் ரெட்டி ஆவேசம்


150 உறுப்பினர்கள் என்னிடம் உள்ளனர், எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள்; ஜெகன்மோகன் ரெட்டி ஆவேசம்
x
தினத்தந்தி 12 July 2019 8:32 AM GMT (Updated: 12 July 2019 8:32 AM GMT)

150 உறுப்பினர்கள் என்னிடம் உள்ளனர் என்றும் எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி ஆவேசமுடன் கூறினார்.

ஆந்திர சட்டப்பேரவையில் அவை நடவடிக்கைகள் தொடங்கிய பின், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது பற்றி முதல் மந்திரி தவறான தகவல்களை கூறுவதாக தெலுங்கு தேசம் குற்றச்சாட்டு கூறியது.  இந்த விவகாரத்தில் ஜெகன் பதவி விலக தயாரா? என சந்திரபாபு நாயுடு சவால் விட்டார்.

இதனிடையே, ஆந்திர சட்டப்பேரவையில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நோட்டீஸ் ஒன்றுக்கு பதிலளித்து இன்று பேச தொடங்கினார்.  அவரை பேச விடாமல் தெலுங்கு தேச கட்சி உறுப்பினர்கள் இடையூறு செய்தனர்.

அவர்களை அமரும்படி ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.  தொடர்ந்து அவர் கூறியும் எதிர்க்கட்சிகள் அமைதி அடையவில்லை.  இதனால், ஆந்திர சட்டப்பேரவையில், ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து, 150 உறுப்பினர்கள் என்னிடம் உள்ளனர்.  எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள் என்று தெலுங்குதேச உறுப்பினர்களை நோக்கி ஜெகன் மோகன் ரெட்டி ஆவேசமுடன் கூறினார்.

அவர் தொடர்ந்து, உங்கள் பார்வைக்கு பயப்படுபவன் நான் அல்ல.  ஒருவர் வளர்வதால் பெரிய ஆள் கிடையாது.  அவரது புத்தியும் வளர வேண்டும்.  அவை நடவடிக்கையில் இடையூறு செய்யாமல் அமருங்கள் என கூறினார்.

Next Story