மும்பை தொடர் குண்டுவெடிப்பு போல தாக்குதல் நடந்தால் மோடி அரசு பதிலடி கொடுக்கும் பியூஸ் கோயல் பேச்சு


மும்பை தொடர் குண்டுவெடிப்பு போல தாக்குதல் நடந்தால் மோடி அரசு பதிலடி கொடுக்கும் பியூஸ் கோயல் பேச்சு
x
தினத்தந்தி 12 July 2019 9:45 PM GMT (Updated: 12 July 2019 8:50 PM GMT)

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மும்பை ரெயில் தொடர் குண்டுவெடிப்பில் 209 பேர் பலியானது போன்ற சம்பவம், மோடி ஆட்சிக்காலத்தில் நடந்திருந்தால், உரிய பதிலடி கொடுத்திருப்போம் என்று பியூஸ் கோயல் கூறினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில், ரெயில்வே மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் நேற்று பதில் அளித்து பேசினார். அவர் பேசியதாவது:-

ரெயில்வே மீது பின்னிரவிலும் விவாதம் நடத்தினோம். இது ஒரு முக்கியமான நாள். எனது சொந்த ஊரான மும்பையில், 2006-ம் ஆண்டு இதே நாளில், புறநகர் ரெயில்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.

11 நிமிட நேரத்தில் 7 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில், 209 பேர் பலியானார்கள். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வளவு பெரிய சம்பவம் நடந்தும், அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எந்த பதிலடியும் கொடுக்கவில்லை. அது ஒரு வெட்கக்கேடு.

அது 2006. அதே போன்ற சம்பவம், மோடி ஆட்சிக்காலத்தில் நடந்திருந்தால், நாங்கள் உரிய பதிலடி கொடுத்திருப்போம்.

ரெயில்வே பட்ஜெட்டை தனியாக சமர்ப்பிக்காமல், பொது பட்ஜெட்டுடன் இணைத்தது தவறான முடிவு என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால், மோடி அரசின் இந்த முடிவை அனைத்து தரப்பினரும் பாராட்டுகிறார்கள்.

பொதுவாக, ரெயில்வே பட்ஜெட், முற்றிலும் அரசியல்ரீதியான பட்ஜெட்டாகவே இருந்தது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும், தொகுதி மக்களை குஷிப்படுத்துவதற்காகவும், நூற்றுக்கணக்கான ரெயில்களும், ரெயில் பாதைகளும் அறிவிக்கப்பட்டன.

ஆனால், தேச சேவை அடிப்படையில், தனி ரெயில்வே பட்ஜெட்டை கைவிடும் முடிவை பிரதமர் மோடி எடுத்தார்.

கடந்த 2007-ம் ஆண்டு, சரக்கு ரெயில் பாதை திட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தொடங்கியது. ஆனால், 2014-ம் ஆண்டுவரை 7 ஆண்டுகளில் வெறும் ரூ.9 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஒரு கி.மீ. தூரத்துக்கு கூட தண்டவாள இணைப்பு போடப்படவில்லை.

மோடி அரசு 2014-ம் ஆண்டு பதவி ஏற்ற பிறகு, அப்பணியில் முன்னேற்றம் ஏற்பட்டது. ரூ.39 ஆயிரம் கோடி முதலீடு செய்தோம். 1,900 கி.மீ. தூரத்துக்கு தண்டவாள இணைப்பு போடப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டுக்குள், 2 சரக்கு ரெயில் பாதைகள் தயாராகிவிடும். இவ்வாறு பியூஸ் கோயல் கூறினார்.

பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் ரெயில்வே மானிய கோரிக்கை நிறைவேறியது.

Next Story