இமாசல பிரதேச சொகுசு விடுதி இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு


இமாசல பிரதேச சொகுசு விடுதி இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
x
தினத்தந்தி 15 July 2019 9:02 AM GMT (Updated: 15 July 2019 9:02 AM GMT)

இமாசல பிரதேச சொகுசு விடுதி இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்து உள்ளது.

சிம்லா,

இமாசல பிரதேச தலைநகர் சிம்லாவில் இருந்து 55 கி.மீட்டர் தொலைவில் உள்ள மாவட்டம் சோலான்.  சிறந்த சுற்றுலாத்தலமான இந்த மாவட்டத்தில் நாஹன் - குமர்ஹாட்டி சாலையை ஒட்டிய பகுதியில் 4 மாடிகள் கொண்ட சொகுசு விடுதி ஒன்று உள்ளது.  கடந்த சில நாட்களாக இங்கு கனமழை பெய்து வரும் நிலையில், இந்த சொகுசு விடுதி தீடிரென நேற்று இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில், கட்டிட இடிபாடுகளுக்குள் 42 பேர் சிக்கி கொண்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இவர்களில் 17 ராணுவ வீரர்கள் உள்பட 28 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 7 பேரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.  உயிரிழந்தவர்களில் 6 பேர் ராணுவ வீரர்கள் ஆவர்.  தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முதல் மந்திரி ஜெய் ராம் தாக்குர் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்றார்.  முதற்கட்ட விசாரணையில், விதிகளின்படி கட்டிடம் கட்டப்படவில்லை என தெரிய வந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.  இதுபற்றிய மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.  கட்டிட உரிமையாளர் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், 12 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என இதுவரை 13 பேரது உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.  ஒருவர் இன்னும் சிக்கியிருக்கிறார் என அஞ்சப்படுகிறது.  28 பேர் காயமடைந்தனர்.  எனினும், இன்று மாலை முடிவடையும் என கூறப்படும் மீட்பு பணியின் முடிவிலேயே உண்மையில் எத்தனைபேர் சிக்கியுள்ளனர் என தெரிய வரும்.

Next Story