ஷீலா தீட்சித் மறைவு: அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு, 2 நாள் துக்கம் அனுசரிப்பு -டெல்லி அரசு அறிவிப்பு


ஷீலா தீட்சித் மறைவு: அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு, 2 நாள் துக்கம் அனுசரிப்பு -டெல்லி அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 20 July 2019 6:11 PM GMT (Updated: 20 July 2019 6:22 PM GMT)

முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித் மறைவையொட்டி, அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு மற்றும் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் டெல்லி அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் முதல்-மந்திரியுமான ஷீலாதீட்சித் (81) இன்று காலமானார். ஷீலா தீட்சித் 1998-ம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் ஆவார். மேலும் ஷீலா தீட்சித் மார்ச் 2014 முதல் ஆகஸ்ட் 2014 வரை கேரள மாநில ஆளுநராகப் பதவி வகித்தார். இவர் டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து வந்தார். இன்று காலை உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஷீலா தீட்சித்  சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

ஷீலா தீட்சித்தின் மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் கட்சி வேறுபாடின்றி பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஷீலா தீட்சித் மறைவையொட்டி, அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்றும், 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் டெல்லி அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் ஷீலா தீட்சித்தின் உடலுக்கு நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Next Story