தூக்கில் பிணமாக தொங்கிய 2 ஆக்கி வீராங்கனைகள்


தூக்கில் பிணமாக தொங்கிய 2 ஆக்கி வீராங்கனைகள்
x
தினத்தந்தி 13 Aug 2019 8:19 PM GMT (Updated: 13 Aug 2019 8:19 PM GMT)

ஒடிசா மாநிலத்தில் 2 ஆக்கி வீராங்கனைகள் தூக்கில் பிணமாக தொங்கினர்.

ராஞ்சி,

ஒடிசா மாநிலம், சுந்தர்கட் மாவட்டத்தை சேர்ந்தவர் சுனந்தினி பாகே (வயது 23). இவர் ரூர்கேலாவில் உள்ள ஆக்கி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார். அப்போது அவருக்கும் அங்கு பயிற்சி பெற்று வந்த ஜார்க்கண்ட், சிம்டேகா மாவட்டத்தை சேர்ந்த ஷிரத்தா சோரங் (18) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இவர்கள் 2 பேரும் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போய்விட்டனர்.

இதுபற்றி அவர்களது பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்படி போலீசார் அவர்களை தேடி வந்தனர். இதையடுத்து ஜார்க்கண்ட் மாநிலம் சிம்டேகா மாவட்டம், பீரு கிராமத்தில், இவர்கள் 2 பேரும் மர்மமான முறையில் மரத்தில் தூக்கில் தொங்கியவாறு பிணமாக கிடந்தனர். அவர்களது உடலை மீட்ட போலீசார், பரிசோதனைக்காக சாதர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரு வீராங்கனைகளும் கொலை செய்யப்பட்டு இருப்பதாக பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின்படி கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. “பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்புதான் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது தெரியவரும்” என்று போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் கூறினார். மர்மமாக இறந்த ஆக்கி வீராங்கனைகள் 2 பேரும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story