2017-ல் பெக்லுகான் கொல்லப்பட்ட சம்பவத்தில் 6 பேரை விடுதலை செய்தது ராஜஸ்தான் கோர்ட்டு


2017-ல் பெக்லுகான் கொல்லப்பட்ட சம்பவத்தில் 6 பேரை விடுதலை செய்தது ராஜஸ்தான் கோர்ட்டு
x
தினத்தந்தி 14 Aug 2019 12:57 PM GMT (Updated: 14 Aug 2019 12:57 PM GMT)

2017-ல் அல்வாரில் பெக்லுகான் என்பவர் பசு பாதுகாவலர்கள் என தங்களை அழைத்துக்கொள்ளும் கும்பலால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.


2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பசுக்களை வாங்கிசென்ற விவசாயி பெக்லுகானை கொடூரக் கும்பல் தாக்கியது. அரியானாவை சேர்ந்த விவசாயி ஜெய்பூரிலிருந்து பசுக்களை வாங்கி சென்ற போது இச்சம்பவம் நடைபெற்றது. கொடூரமான கும்பல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெக்லுகான் அரசு மருத்துவமனையில் 3 நாட்கள் கழித்து உயிரிழந்தார்.  அவர் கொடூரமான முறையில் தாக்கப்படும் சம்பவம் வீடியோவாக வெளியானது. 

குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலரை அடையாளம் காணவும் கைது செய்யவும் இந்த வீடியோ காட்சிகள் காவல்துறைக்கு உதவியது. இச்சம்பவத்தில் அம்மாநில காவல்துறை இருவழக்குகளை பதிவு செய்தது. 

பெக்லுகானை தாக்கியவர்களுக்கு எதிராக ஒருவழக்கும், முறையான ஆவணமின்றி பசுக்களை கொண்டுச் சென்ற பெக்லுகான் மற்றும் அவருடைய மகனுக்கு எதிராக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இப்போது குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை ராஜஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வீடியோ சான்றுகள் போதிய ஆதரமாக இல்லையென நீதிமன்றம் வெளிப்படையாகக் கூறியுள்ளது என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

Next Story