மாற்றங்களுக்கு பின்பும் சரியும் பொருளாதாரம்.. கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்த பங்குச் சந்தைகள்


மாற்றங்களுக்கு பின்பும் சரியும் பொருளாதாரம்.. கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்த பங்குச் சந்தைகள்
x
தினத்தந்தி 3 Sep 2019 12:56 PM GMT (Updated: 3 Sep 2019 1:21 PM GMT)

மாற்றங்களுக்கு பின்பும் பொருளாதாரம் சரிந்து வருகிறது. இன்று கடும் வீழ்ச்சியுடன் பங்குச் சந்தைகள் நிறைவடைந்தது.

மும்பை

வெள்ளியன்று நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதில் ஜூன் 30-ம்தேதியுடன் முடிந்த காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக மட்டுமே இருந்தது.  இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி என்பது எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாக உள்ளது. பல்வேறு சர்வதேச காரணங்கள் இதன் பின்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போர், காலனிகள், ஸ்மார்ட் வாட்ச், டிவி போன்ற சீன பொருட்களுக்கு 15 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது, அமெரிக்க கச்சா எண்ணெய்க்கு சீனா வரியை விதித்தது போன்றவை சர்வதேச பொருளாதாரத்தை பாதித்துள்ளன. 

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக யுத்தம் சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

பொருளாதார மந்த நிலையை சரி செய்யும் விதமாக நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டத்தை கடந்த வெள்ளியன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். வங்கிகள் இணைப்பு அறிவிப்பால் பங்குச் சந்தையில் அவற்றின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் 3.5 சதவீதம் குறைந்துள்ளது.

பொருளாதார மந்த நிலை காரணமாக பங்குச் சந்தை வர்த்தகம் இன்று சரிவைச் சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 770 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் நிறைவு பெற்றது. மாலையில்  36,563  புள்ளிகளுடன் நிறைவு பெற்றது. அதேபோல் நிஃப்டி மேலும் சரிந்து 10,798 புள்ளியுடன் நிறைவு பெற்றது. 

 3.7 சதவீத அளவுக்கு பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. இதேபோன்று இந்தியன் ஆயில், டாடா மோட்டார்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், எச்.டி.எப்.சி., டாடா ஸ்டீல் உள்ளிட்டவற்றின் பங்குகளும் சரிந்துள்ளன. 

அதே சமயம் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் சந்தையில் எதிரொலிக்க மேலும் சில நாட்கள் ஆகும் என்று கூறுகிறார்கள். இதனால் அவசரமாக பொருளாதார சரிவை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் மத்திய அரசு பெரிய குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளது. 

Next Story