‘சந்திரயான்-2’ திட்டத்தின் முக்கிய நிகழ்வு: நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் நாளை தரை இறங்குகிறது


‘சந்திரயான்-2’ திட்டத்தின் முக்கிய நிகழ்வு: நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் நாளை தரை இறங்குகிறது
x
தினத்தந்தி 5 Sep 2019 11:52 PM GMT (Updated: 5 Sep 2019 11:52 PM GMT)

‘சந்திரயான்-2’ திட்டத்தின் முக்கிய நிகழ்வு நாளை அதிகாலையில் நடக்கிறது. அப்போது விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரை இறங்கும் என்று இஸ்ரோ கூறி உள்ளது.

பெங்களூரு, 

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகளுடன் அமர்ந்து பிரதமர் மோடி இந்த நிகழ்வை, பார்வையிடுகிறார்.

இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் (ஆகஸ்டு) 14-ந்தேதி ‘சந்திரயான்-2’ விண்கலம் புவி வட்டப்பாதையில் இருந்து பிரிந்து நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது.

கடந்த மாதம் 20-ந்தேதி ‘சந்திரயான்-2’ விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாக 5 முறை ‘சந்திரயான்-2’ விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. கடந்த 2-ந்தேதி ‘சந்திரயான்-2’ விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க தொடங்கியது.

3-ந்தேதி மற்றும் நேற்று முன்தினம் என்று 2 முறை உள் உந்து விசையை பயன்படுத்தி விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கி உள்ளது.

‘சந்திரயான்-2’ விண்கல திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு நாளை(சனிக்கிழமை) அதிகாலையில் நடக்க உள்ளது. அதாவது விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் மிகவும் மெதுவாக நாளை அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் தரையில் இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்து உள்ளனர்.

நிலவின் தென்துருவத்தில் மான்சினஸ்-சி, சிம்பிலியஸ்-எஸ் என்ற பள்ளங்களுக்கு நடுவே விக்ரம் லேண்டர், 70 டிகிரி கோணத்தில் மெதுவாக தரையிறக்கம் செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆய்வை தொடங்க உள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை ஒரு நிலவு நாள் (14 பூமி நாட்கள்) நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்யும்.

நிலவின் வடதுருவத்தை ஒப்பிடும்போது தென்துருவத்தில் நிலவின் அளவு மிகப்பெரியதாக இருக்கும். இதன்மூலம் நிலவை சுற்றி தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். கூடுதலாக நிலவின் தென்துருவத்தில் உள்ள பள்ளங்கள் சூரிய மண்டலத்தின் புதை படிவங்களுடன் குளிர்புதை மணல் களை கொண்டு இருக்கலாம் என்பதையும் கணிக்க முடியும்.

இந்த செயல்பாடுகள் அனைத்தும் முடிவடையும்போது இந்தியா வரலாற்று சாதனையில் இடம் பிடிக்கும். அதாவது நிலவில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கிய நாடுகள் வரிசையில் ரஷியா, அமெரிக்கா, சீனா வரிசையில் 4-வது இடத்தை இந்தியா பிடிக்கும். அதேநேரத்தில் நிலவின் தென்துருவத்தில் இந்த செயலை செய்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவையே சேரும். ஏனென்றால் இதற்கு முன்பு நிலவின் தென்துருவத்தில் எந்த நாடும் ஆய்வு மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்கும் நிகழ்வை, பெங்களூரு பீனியாவில் உள்ள இஸ்ரோ செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகளுடன் அமர்ந்து பிரதமர் மோடி பார்வையிடுகிறார். இதற்காக பிரதமர் மோடி இன்று(வெள்ளிக்கிழமை) இரவு பெங்களூரு வருகிறார்.

கவர்னர் மாளிகையில் தங்கும் அவர், நாளை அதிகாலை இஸ்ரோ மையத்திற்கு வருகிறார். அவருடன் கவர்னர் வஜூபாய் வாலா, முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்டோரும் வரவுள்ளனர். அங்கு பிரதமருடன் அமர்ந்து 70 மாணவர்களும் நிலவில் ‘சந்திரயான்-2’ விண்கலம் தரையிறங்குவதை பார்வையிட உள்ளனர்.

பிரதமர் வருகையை முன்னிட்டு பெங்களூருவில் குறிப்பாக பீனியாவில் உள்ள இஸ்ரோ செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 

Next Story