தெலுங்கானாவில் புதிதாக 6 மந்திரிகள் நியமனம்: கவர்னர் தமிழிசை பதவி பிரமாணம் செய்து வைத்தார்


தெலுங்கானாவில் புதிதாக 6 மந்திரிகள் நியமனம்: கவர்னர் தமிழிசை பதவி பிரமாணம் செய்து வைத்தார்
x
தினத்தந்தி 8 Sep 2019 9:01 PM GMT (Updated: 8 Sep 2019 9:01 PM GMT)

தெலுங்கானாவில் புதிதாக 6 மந்திரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

மந்திரி சபையில் முதல்-மந்திரி உள்பட 12 பேர் இருந்து வந்தனர். இந்தநிலையில் முதல்-மந்திரி சந்திரசேகரராவ் நேற்று மந்திரி சபையை விரிவுபடுத்தினார். புதிதாக 6 பேரை மந்திரிகளாக நியமித்தார்.

தெலுங்கானா கவர்னராக பதவி ஏற்றுக் கொண்ட தமிழிசை சவுந்தரராஜன், புதிய மந்திரிகளுக்கு கவர்னர் மாளிகையில் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மந்திரி சபையில் முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகன் கே.டி. ராமராவுக்கு இடம் கிடைத்துள்ளது. இதேபோல் முதல்-மந்திரியின் உறவினரும், கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.வுமான ஹரிஸ் ராவும் இடம் பெற்றுள்ளார்.

முன்னாள் மந்திரி சபிதா இந்திரா ரெட்டி உள்பட 2 பெண்களும் மந்திரி சபையில் இடம் பிடித்துள்ளனர். இதன் மூலம் தெலுங்கானா மந்திரி சபையின் பலம் 18 ஆக அதிகரித்துள்ளது.


Next Story