ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் செய்துவிட்டு கூலிக்கு ஆள்வைத்து தன்னையே கொல்ல வைத்த ‘வக்கிர’ மனிதர்


ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் செய்துவிட்டு கூலிக்கு ஆள்வைத்து தன்னையே கொல்ல வைத்த ‘வக்கிர’ மனிதர்
x
தினத்தந்தி 10 Sep 2019 1:35 PM GMT (Updated: 10 Sep 2019 10:31 PM GMT)

ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் செய்து விட்டு கூலிக்கு ஆள்வைத்து தன்னையே கொல்ல வைத்த ‘வக்கிர’ மனிதர் பற்றி திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்து இருக்கிறது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் பிஸ்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பல்பீர்கரோல் (வயது 38). இவர் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். அவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் யாரும் சரியாக பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

இதனால் மனமுடைந்த அவர் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்து வந்தார். இதற்கிடையே கடந்த 2-ந்தேதி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் ஆண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது இறந்த நபர் பல்பீர் கரோல் என்பதும் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

அவர் வைத்திருந்த செல்போனில் உள்ள எண்களை ஆய்வு செய்த போலீசார் அதில் பேசியவர்கள் விவரத்தை சேகரித்தனர். அதில் ராஜ்வீர் சிங், சுனில் யாதவ் என்ற 2 பேர் அவரோடு அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து, விசாரணை நடத்தினர். அப்போது அவர் கள் இருவரும் பல்வீர்கரோலை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரேந்திர மகாவர் கூறியதாவது, இந்த கொலையில் ஒரு வினோதம் நடந்து உள்ளது. பல்வீர் கரோல் அவர் வசித்த பகுதி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் சுமார் ரூ.20 லட்சம் வரை வட்டிக்கு கொடுத்துள்ளார். இதில் பலர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் வட்டி தொழிலை தொடர்ந்து செய்ய இயலவில்லை.

பணம் பெற்றவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வது தான் வழக்கம். ஆனால் இவர் ஒரு வினோத முடிவை எடுத்தார்.

பல்பீர் கடந்த மாதம் ஒரு தனியார் வங்கியில் தனது பெயரில் ரூ.50 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் செய்தார். முதல் தவணை பணத்தையும் கட்டி இருக்கிறார். தான் இறந்து விட்டால் காப்பீடு தொகை தனது குடும்பத்திற்கு பயன் உள்ளதாக அமையும் என்று கருதிய அவர், செயற்கையாக தனது உயிரை மாய்க்க திட்டமிட்டார். விபத்து ஏற்படுத்தி உயிர் இழக்க நினைத்தார். அப்படி செய்தால் ஒருவேளை பிழைத்து கொண்டால் என்ன செய்வது என்ற சந்தேகம் அவருக்கு வந்தது.

இதனால் கூலிப்படையை சேர்ந்த ராஜ்வீர் சிங், சுனில் யாதவ் உதவியை நாடினார். அவர்களிடம் தன்னை கொலை செய்தால் ரூ.80 ஆயிரம் தருவதாக பேரம் பேசினார். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் பணத்திற்காக இந்த திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். முன் பணமாக ரூ.10 ஆயிரம் பல்பீர்கரோல் கொடுத்தார். தன்னை கொலை செய்து விட்டு மீதி பணத்தை தனது சட்டைபையில் எடுத்து கொள்ளுங்கள் என்று கூறினார். திட்டமிட்டப்படி ஆட்கள் இல்லாத இடத்திற்கு மூன்று பேரும் சென்றனர்.

அதன் பின்னர் இருவரும் பல்பீர்கரோலின் கை, கால்களை கட்டிப்போட்டு கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின் அவரது சட்டைபையில் இருந்த ரூ.70 ஆயிரத்தை எடுத்து கொண்டு இருவரும் தப்பி சென்று தலைமறைவாகினர்.

பல்பீர் கொலையில் அவரது செல்போன் எண்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், இவர்களை கைது செய்வதற்கு தங்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

இந்த சம்பவம் போலீஸ் துறையில் பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது. இதுவரை இப்படி ஒரு வினோத கொலையை நாங்கள் பார்த்தது இல்லை என்று அவர் கூறினார்.


Next Story