புதிய வாகன சட்டம்: மேற்கு வங்கத்தில் அமல்படுத்தமாட்டோம் - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி


புதிய வாகன சட்டம்: மேற்கு வங்கத்தில் அமல்படுத்தமாட்டோம் - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 11 Sep 2019 5:18 PM GMT (Updated: 11 Sep 2019 5:18 PM GMT)

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, புதிய வாகன சட்டத்தினை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தமாட்டோம் என அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், அதற்கான அபராத கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டது.  சாலை விதிகளை மீறுவோர் மீது தற்போது போலீசார் புதிய விதிகளின் படியே அபராதம் விதித்து வருகின்றனர்.  

இந்த சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், அபராதம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். திருத்தியமைக்கப்பட்ட அபராதங்களை அமல்படுத்துவது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என மத்திய போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்த திருத்தியமைக்கப்பட்ட வாகன சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தமாட்டோம் என அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்த புதிய அபராத நடைமுறை குறித்து மம்தா பானர்ஜி, “திருத்தியமைக்கப்பட்ட வாகனச்சட்டத்தை நடைமுறைபடுத்தினால் பொதுமக்களின் மீது அதிக சுமையை வைப்பது போல் ஆகிவிடும் என எங்கள் மாநிலத்தின் அரசு அதிகாரிகள் கருதுவதால் இதை இங்கு அமல்படுத்தமாட்டோம். நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தை நாங்கள் எதிர்த்தோம். பணம் ஒரு தீர்வை ஏற்படுத்தாது. மனிதாபிமான அடிப்படையில் பார்க்க வேண்டும். மேற்கு வங்கத்தில் ஏற்கனவே சேப் டிரைவ், சேவ் லைப் என்ற பிரசாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் விபத்துகள் குறைந்துள்ளது” என்று தெரிவித்தார்.

Next Story