ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு கவலைக்குரிய நிலையில் உள்ளது - துணை முதல்வர் சச்சின் பைலட்


ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு கவலைக்குரிய நிலையில் உள்ளது - துணை முதல்வர் சச்சின் பைலட்
x
தினத்தந்தி 12 Sep 2019 11:15 AM GMT (Updated: 12 Sep 2019 11:15 AM GMT)

ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு கவலைக்குரிய நிலையில் உள்ளதாக அம்மாநிலத்தின் துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்து உள்ளார்.

ஜெய்ப்பூர்,

ஜெய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட்  கூறியதாவது:-

எதிர்க்கட்சித் தலைவர் அரசை தாக்கி பேசியிருந்தாலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது உண்மைதான்.

தோல்பூர், ஆல்வார் அல்லது பெஹ்ரர் உள்ளிட்ட பல இடங்களில் சட்டம் ஒழுங்கு கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில் தான் உள்ளது. இந்த விசயத்தில் அரசு தீவிரமாக செயல்பட வேண்டும் என கூறினார்.

துணை முதல்வர் சச்சின் பைலட்டின் கருத்து, உள்துறை அமைச்சக பொறுப்பை வைத்திருக்கும் முதலமைச்சர் கெலாட்டை குற்றஞ்சாட்டும் வகையில் உள்ளதாக காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூரில் சுதந்திர தினத்தன்று பல்வேறு இடங்களில் கல்வீச்சு நடந்தது மட்டுமின்றி காவல்நிலையம் ஒன்றுக்கு மர்ம கும்பல் தீ வைத்தது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் விவசாயி பெஹ்லு கான் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது.

இதை தொடர்ந்து மாநிலத்தில் காவல்துறை பலவீனமாக இருப்பதாலும் சட்டம் ஒழுங்கு தோல்வியடைந்துள்ளதாலும் ஆங்காங்கே கலவரம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா சட்டசபையில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

தற்போது எதிர்க்கட்சியின் கருத்தை ஆமோதிப்பது போல் துணை முதல்வரே பேசி  இருப்பது ஆட்சிக்குள்ளும், கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story