கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.487 கோடிக்கு மது விற்பனை


கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.487 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 13 Sep 2019 7:47 PM GMT (Updated: 13 Sep 2019 7:47 PM GMT)

கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.487 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபானங்கள் அரசு மதுபான விற்பனை கழகம் மூலம் விற்கப்படுகிறது. கேரளாவில் மதுபானங்களை விற்பனை செய்ய மாநிலம் முழுவதும் 270 சில்லரை விற்பனை நிலையங்கள் உள்ளது.

வார இறுதி நாட்களிலும், முக்கிய பண்டிகை நாட்களிலும் அங்கு மதுபான விற்பனை களைகட்டும். குறிப்பாக ஓணம் பண்டிகை நாட்களில் மது விற்பனை அமோகமாக இருக்கும். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை தொடங்கிய நாள் முதல் மதுபான விற்பனை சூடுபிடித்தது.

கடந்த 3-ந்தேதி முதல் ஓணம் பண்டிகைக்கு முந்தின நாளான 10-ந்தேதி வரை 8 நாட்களில் ரூ.487 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. 10-ந்தேதி மட்டும் 90.30 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே 8 நாட்களில் மது விற்பனை 457 கோடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதை விட 30 கோடி அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு கனமழை காரணமாக மதுவிற்பனை குறைந்தது என்று கூறப்பட்டது. இந்த ஆண்டும் கேரளாவில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோதிலும் மதுவிற்பனை மட்டும் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது பார்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. ஆனால் தற்போதுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி அரசு அந்த தடையை நீக்கியது.

இதனால் மது ‘பார்’களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை அதிகரிக்க இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

Next Story