அக்ரஹாரா சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது உண்மையே விசாரணை அறிக்கையில் தகவல்


அக்ரஹாரா சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது உண்மையே விசாரணை அறிக்கையில் தகவல்
x
தினத்தந்தி 9 Oct 2019 6:55 AM GMT (Updated: 9 Oct 2019 6:55 AM GMT)

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறிய புகார் உண்மையே என விசாரணைக் குழு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

பெங்களூரு

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் அவருக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக புகார்கள் கூறப்பட்டன.

கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக ரூபா நியமிக்கப்பட்டார். ரூபா பரப்பன அக்ரஹாரா சிறைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். கைதிகளிடம் குறைகளையும் கேட்டு அறிந்தார்.

பின்னர் அவர் சசிகலா, இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சசிகலாவுக்கு தனி சமையலறை அமைத்து கொடுத்திருந்தது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் சசிகலாவுக்கு சில சிறப்பு வசதிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருவதும் அதிகாரி ரூபாவின் கவனத்திற்கு வந்தது.

இதுதொடர்பாக அதிகாரி ரூபா, விவரமாக ஒரு அறிக்கையை தயாரித்து கடந்த 12-ந் தேதி சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் மற்றும் மாநில போலீஸ் டி.ஜி.பி. ஆர்.கே.தத்தா ஆகியோருக்கு அனுப்பிவைத்தார். இதில் சசிகலாவுக்கு தனி சமையலறை மற்றும் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக சசிகலாவிடம் இருந்து டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியுள்ளார் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி இருந்தார்.

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டு, கட்டில் மெத்தை, டெலிவிஷன் பெட்டி, தனி சமையலறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும். சசிகலா சிறையில் இருந்து சல்வார் கமீஸ் உடை அணிந்து கையில் பையுடன் சென்று வரும் வீடியோ இடம் பெற்று இருந்தது. இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடைபெறுவதாக கூறப்படும் முறைகேடு புகார் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டு இருந்தது.

 பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறிய புகார் உண்மையே என  விசாரணைக் குழு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சிறையில் சலுகைகளைப் பெற சசிகலா லஞ்சம் தந்ததாக வெளியான தகவலும் உண்மையே  என விசாரனை அறிக்கை தெரிவித்து உள்ளது.

Next Story