மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வு - மந்திரி சபை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்து உள்ளது. இதன் மூலம் சுமார் 50 லட்சம் பேர் பயனடைவார்கள் என கூறப்பட்டு உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வு - மந்திரி சபை ஒப்புதல்
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் முக்கியமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவதாகவும், அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் இந்த உயர்வு கணக்கில் கொள்ளப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.15,909.35 கோடி செலவாகும் எனவும், நடப்பு 2019-20-ம் நிதியாண்டில் (8 மாதங்கள்) மட்டும் ரூ.10,606.20 கோடி செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.

இதன் மூலம் 49.93 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என அரசு கூறியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 9 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல்தான் 12 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் அதில் 5 சதவீதம் உயர்த்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே கட்டமாக 5 சதவீதம் உயர்த்தப்பட்டு இருப்பது எப்போதும் இல்லாத நடவடிக்கை எனக்கூறிய மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், அரசு ஊழியர்களுக்கு இதுவும் ஒரு தீபாவளி போனஸ் போன்றதுதான் என்றும் தெரிவித்தார்.

இதைத்தவிர மேலும் சில திட்டங்களுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது. அதன்படி சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் ஆதார் இணைப்பதற்கான காலக்கெடுவை இந்த மாதம் 30-ந்தேதி வரை நீட்டிக்க மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. முன்னதாக இதற்கான காலக்கெடு கடந்த ஆகஸ்டு 1-ந்தேதியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இதைப்போல பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்து காஷ்மீரில் குடியேறிய குடும்பங்களுக்கு நிவாரணமாக ஒரே கட்டமாக ரூ.5.5 லட்சம் வழங்கும் திட்டத்துக்கும் மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் 5,300 குடும்பங்கள் பயனடைவார்கள் என கூறப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com