ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரம் மீண்டும் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கை


ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரம் மீண்டும் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 17 Oct 2019 12:14 AM GMT (Updated: 17 Oct 2019 12:14 AM GMT)

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை அமலாக்கத்துறை எடுத்தது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஒரு வழக்காக ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு மாறி உள்ளது.

புதுடெல்லி, 

மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில், தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம் (வயது 74), 2007-ம் ஆண்டு, மத்திய நிதி மந்திரி பதவி வகித்தார்.

அப்போது அவர், மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு, விதிமுறைகளை மீறி ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி திரட்டுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றுத்தந்தார்; இதற்கு அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உதவினார் என்ற புகார் எழுந்துள்ளது.

சட்டத்துக்கு புறம்பாக அனுமதி பெற்றுத்தந்ததற்காக கார்த்தி சிதம்பரம் மூலமாக ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் இருந்து ப.சிதம்பரம் லஞ்சம் பெற்றார் என்று சொல்லப்படுகிறது.

இதில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. ஒரு குற்ற வழக்கும், சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்க பிரிவு இயக்குனரகம் ஒரு வழக்கும் பதிவு செய்து, அவை டெல்லி சி.பி.ஐ. தனி கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளில் கார்த்தி சிதம்பரம் கைதாகி, தற்போது ஜாமீனில் உள்ளார்.

ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சி.பி.ஐ. கைது செய்தது. அதைத் தொடர்ந்து அவர் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.

அந்த விசாரணை முடிந்தபின்னர் அவர் டெல்லி திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் அவர் 55 நாட்களாக காவலில் உள்ளார். அவரது நீதிமன்றக்காவல் இன்று (வியாழக்கிழமை) முடிகிறது.

அமலாக்கப்பிரிவு பதிவு செய்துள்ள வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 5-ந்தேதி மறுத்துவிட் டது. அவரை காவலில் வைத்து விசாரிப்பது அவசியம், தற்போதைய நிலையில் முன்ஜாமீன் வழங்கினால் அது வழக்கின் விசாரணையை பாதிக்கும் என கூறி விட்டது.

தற்போது நீதிமன்றக்காவலில் உள்ள ப.சிதம்பரத்தை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் அமலாக்கப்பிரிவு மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவை நீதிபதி அஜய்குமார் குஹர் விசாரித்து, திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தவும், தேவைப்பட்டால் அவரை கைது செய்யவும் அனுமதி அளித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து அமலாக்கப்பிரிவின் 3 அதிகாரிகளை கொண்ட குழுவினர், நேற்று காலை 8.15 மணிக்கு திகார் சிறைக்கு சென்றனர். அங்கு அவர்கள் ப.சிதம்பரத்திடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலத்தையும் பதிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ப.சிதம்பரத்தை மீண்டும் கைது செய்தனர். சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கையை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் எடுத்தனர்.

ப.சிதம்பரத்தை பார்க்க அவரது மனைவி நளினி சிதம்பரமும், மகன் கார்த்தி சிதம்பரமும் திகார் சிறைக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி அஜய்குமார் குஹர் முன்பாக அமலாக்கப்பிரிவு சார்பில் வக்கீல்கள் அமித் மகாஜனும், என்.கே. மட்டாவும் ஆஜராகினர். அவர்கள் ப.சிதம்பரத்திடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக நீதிபதியிடம் தெரிவித்தனர்.

மேலும் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் அமலாக்கப்பிரிவு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரும் மனுவையும் தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இன்று பகல் 3 மணிக்கு ப.சிதம்பரத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி அஜய்குமார் குஹர் உத்தரவிட்டார்.

எனவே சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் இன்று பகல் 3 மணிக்கு ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போது அவரை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கப்பிரிவினர் தாக்கல் செய்துள்ள மனு மீது நீதிபதி விசாரணை நடத்தி, உத்தரவு பிறப்பிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story