டெல்லி விமான நிலையத்தில் ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுகளுடன் மர்ம பை - போலீஸ் தீவிர விசாரணைம்


டெல்லி விமான நிலையத்தில் ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுகளுடன் மர்ம பை - போலீஸ் தீவிர விசாரணைம்
x
தினத்தந்தி 1 Nov 2019 6:54 AM GMT (Updated: 1 Nov 2019 7:48 PM GMT)

டெல்லி விமான நிலையத்தில் ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுகளுடன் மர்ம பை கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 3 முனையங்கள் உள்ளன. இதில் 3-வது முனையத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. 3-வது முனையத்தின் வருகை பகுதியில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் கருப்பு நிற பை தனியாக இருந்தது.

இதனை விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். இதுகுறித்து விமான நிலைய போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும், தொழில் பாதுகாப்பு படையினரும் அந்த பையை பார்த்தபோது அதில் சில மின்சார ஒயர்கள் இருப்பதுபோல தெரிந்தது. அந்த இடத்தில் இருந்த பயணிகளை போலீசார் சோதனை செய்து அப்புறப்படுத்தினர். சில பயணிகள் பீதியுடன் ஓட்டம் பிடித்தனர்.

உடனே வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் அந்த பையை சோதனை செய்தனர். மோப்ப நாயும் அந்த பையை சோதனை செய்தது. முதல்கட்ட சோதனையில் அந்த பையில் ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பயணிகள் யாரும் அந்த பகுதியில் அனுமதிக்கப்படவில்லை. விமான நிலையத்தின் வெளியில் உள்ள சாலையிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

பின்னர் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் அந்த மர்ம பையை பாதுகாப்பாக வேறு ஒரு பகுதிக்கு கொண்டுசென்று குளிரூட்டும் வகையில் குழியில் வைத்தனர். தொடர்ந்து 24 மணி நேரம் அந்த வெடிகுண்டு பை போலீசாரின் கண்காணிப்பில் இருக்கும்.

அந்த பையில் வெடிகுண்டு அல்லது கண்ணிவெடிகள் இருக்கலாம் என்றும், 24 மணி நேரத்துக்கு பின்னரே அந்த பையை திறந்து சோதனை செய்வோம். அதன்பின்னரே அந்த பையில் இருப்பது எந்தவகை வெடிகுண்டு என்பது உறுதியாக தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

காலை 4 மணி அளவில் அந்த பகுதியில் இயல்புநிலை மீண்டும் திரும்பியது. பயணிகளும் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் விமான நிலையத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் விமான நிலையம் சில மணி நேரம் பரபரப்பாக இருந்தது.


Next Story