அயோத்தி தீர்ப்பு எதிரொலி: உத்தரபிரதேச மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்? - உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு


அயோத்தி தீர்ப்பு எதிரொலி: உத்தரபிரதேச மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்? - உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 5 Nov 2019 12:16 PM GMT (Updated: 5 Nov 2019 9:00 PM GMT)

அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு கூறப்பட உள்ளதால் உத்தரபிரதேச மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பு வெளியிட உள்ளது. இதையொட்டி அயோத்தி மாவட்டம் முழுவதும் ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த சில பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 7 பயங்கரவாதிகள் தங்கள் தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நேபாளம் வழியாக இந்த மாநிலத்திற்குள் நுழைந்துவிட்டனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரபிரதேசத்தில் நுழைந்த 7 பயங்கரவாதிகளில் 5 பேரை உளவு பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் முகமது யாகூப், அபு ஹம்சா, முகமது ஷாபாஸ், நிசார் அகமது, முகமது காமி சவுத்ரி என உளவுப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த பயங்கரவாதிகள் அயோத்தி, கோரக்பூர் அல்லது இந்திய-நேபாள எல்லையில் உள்ள சில இடங்களில் பதுங்கியிருக்கலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் போலீசார் தங்களுக்கு பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எந்த தகவலும் வரவில்லை என்றும், இருந்தாலும் அயோத்தி தீர்ப்பு வெளியாக இருப்பதையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.

மாநில டி.ஜி.பி. ஓ.பி.சிங் கூறும்போது, “மாநில போலீசார் உச்சகட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எதையும் சந்திக்க தயாராக உள்ளோம். சட்டம் -ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுத்தும் சக்திகள் மீது தேவைப்பட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பயன்படுத்தப்படும். எந்த சூழ்நிலையிலும் யாரும் சட்டத்தை கையில் எடுக்க அனுமதிக்கமாட்டோம். எங்கள் உளவுப்பிரிவும் முடுக்கிவிடப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், அயோத்தி அடங்கியுள்ள பைசாபாத் மாவட்டத்தில் 1,600 இடங்களில் அமைதியை பராமரிப்பதற்காக, 16 ஆயிரம் தன்னார்வ தொண்டர்களை போலீசார் நியமித்துள்ளனர்.

அதேபோல், சமூக வலைத்தளங்களில் விரும்பத்தகாத தகவல்கள் பரப்பப்படுவதை கண்காணிப்பதற்காக, 16 ஆயிரம் தன்னார்வ தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தன்னார்வ தொண்டர்கள் ஒருவருக்கொருவர் தகவல் பகிர்ந்து கொள்வதற்காக, பல்வேறு வாட்ஸ்-அப் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

4 பாதுகாப்பு மண்டலங்களாக, அயோத்தி பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு மண்டலத்தில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினர் தங்குவதற்காக, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் திவாரி தெரிவித்தார்.



Next Story