டெல்லி போலீசார் 7 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் போராட்டம்


டெல்லி போலீசார் 7 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் போராட்டம்
x
தினத்தந்தி 5 Nov 2019 1:23 PM GMT (Updated: 5 Nov 2019 1:23 PM GMT)

டெல்லி தீஸ்ஹசாரி கோர்ட் வளாகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக போலீசார் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியின் தெற்கு பகுதியில்  தீஸ்ஹசாரி கோர்ட்டு உள்ளது. கடந்த 2-ந்தேதி இங்கு வாகனம் நிறுத்தம் தொடர்பாக போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமானது. இதன் தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள சகேட் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் பணியில் இருந்த ஒரு போலீஸ் மீது வக்கீல்கள் சிலர் தாக்குதல் நடத்தினர்.  

இதையடுத்து, வக்கீல்கள் தாக்கியதை கண்டித்து டெல்லியில் இன்று போலீசார் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலவரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்திய டெல்லி உயர் நீதிமன்றம், வன்முறை சம்பவம் குறித்து 6 வாரத்துக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.பி.கார்க்கை நியமித்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன், டெல்லி காவல்துறை அதிகாரிகள் இருவரை பணியிடமாற்றம் செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் சில வழக்கறிஞர்கள் சங்கங்கள் ஈடுபட்டன. போலீசார் மீது வழக்கறிஞர்கள் நடத்திய தாக்குதலை கண்டிக்கும் விதமாக டெல்லி காவல்துறை தலைமையகத்தில் போலீசார் கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் போலீசாரின் போராட்டத்தை கைவிட நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  எனினும், 7 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்து வருகிறது. 

Next Story