இந்தியாவில் காற்றை மாசுபடுத்த பாகிஸ்தான் விஷ வாயுவை வெளியிட்டிருக்கலாம் -பாஜக மூத்த தலைவர் கருத்து


இந்தியாவில் காற்றை மாசுபடுத்த பாகிஸ்தான் விஷ வாயுவை வெளியிட்டிருக்கலாம் -பாஜக மூத்த தலைவர் கருத்து
x
தினத்தந்தி 6 Nov 2019 9:39 AM GMT (Updated: 6 Nov 2019 9:39 AM GMT)

இந்தியாவில் காற்றை மாசுபடுத்த பாகிஸ்தான் விஷ வாயுவை வெளியிட்டிருக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர் வினீத் அகர்வால் சர்தா கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் விவசாய கழிவுபொருட்களை எரிப்பதால் ஏற்படும் கரும்புகையால் டெல்லியில் காற்று மாசு ஏற்படுகிறது.  வாகனங்களாலும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்காக ஒற்றை, இரட்டை இலக்க பதிவெண் கொண்ட வாகனங்களை இயக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

டெல்லியில் காற்று தர குறியீடு 500-க்கும் மேல் உள்ளது. இது மித அளவை விட 5 மடங்கு அதிகம் ஆகும்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் வினீத் அகர்வால் சர்தா கூறியதாவது:- 

டெல்லி காற்று மாசுபாட்டிற்கு பாகிஸ்தான் மற்றும் சீனா காரணமாக இருக்கலாம். பாகிஸ்தான் ஏதேனும் விஷ வாயுவை வெளியிட்டுள்ளதா என்பதை நாம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா பொறுப்பேற்றதிலிருந்து பாகிஸ்தான் விரக்தியடைந்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாததால் பாகிஸ்தான் தந்திரங்களை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் காற்று மாசு ஏற்படுவதற்கு குண்டுவெடிப்பு மற்றும் தொழிற்சலைகளின் நச்சு வாயுகள்  வெளியேற்றமே காரணம் என அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பொதுமக்கள்  கூறுகின்றனர்.

விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பாகும். விவசாயிகளையும் தொழில்களையும் குறை கூறக்கூடாது. மோடியும் அமித்ஷாவும்
அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் திறன் கொண்டவர்கள். மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணனை போன்றவர் மோடி. அதேபோல் அர்ஜுனனை போன்றவர் அமித்ஷா. இந்த விவகாரத்தை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் எனத் தெரிவித்தார்.

Next Story