கர்தார்பூர் சாஹிப் சாலை திறப்பு விழாவில் பங்கேற்ற மன்மோகன் சிங்கை நலம் விசாரித்த பிரதமர் மோடி!


கர்தார்பூர் சாஹிப் சாலை திறப்பு விழாவில் பங்கேற்ற மன்மோகன் சிங்கை நலம் விசாரித்த பிரதமர் மோடி!
x
தினத்தந்தி 9 Nov 2019 11:27 AM GMT (Updated: 9 Nov 2019 11:27 AM GMT)

கர்தார்பூர் யாத்திரைக்கு செல்லும் சிறப்பு சாலை திறக்கும் விழாவில் பங்கேற்ற மன்மோகன் சிங்கை பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.

அமிர்தசரஸ்,

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக், தனது வாழ்வின் கடைசி 18 ஆண்டுகளை பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அங்கு அவரது நினைவாக கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சீக்கியர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வருவது கடமையாக உள்ளது. இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இந்த கர்தார்பூர் சாகிப் குருத்வாரா உள்ளது. 

இதற்காக சீக்கிய பக்தர்கள், சென்று வருவதற்கு வசதியாக இரு நாடுகளுக்கு இடையே, 3 கி.மீ., துாரத்துக்கு சாலை அமைக்கும் திட்டத்தை, இரு நாடுகளும் செயல்படுத்தி உள்ளன. பஞ்சாப் மாநிலத்தின் கர்தார்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவிலிருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கு இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சாலையை யாத்ரீகர்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அப்போது  மன்மோகன் சிங்கை பிரதமர் மோடி சந்தித்தார். இருவரும் ஒருவொருக்கொருவர் ஆரத்தழுவி நலம் விசாரித்துக்கொண்டனர். பின்னர் இருவரும்  கைக்குலுக்கி நன்றி தெரிவித்தனர். இரு தலைவர்கள் ஒருவொருக்கொருவர் நலம் விசாரித்த இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

Next Story