எதிர்காலத்தில் ராகுல் காந்தி மிகவும் கவனமாக பேச வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை


எதிர்காலத்தில் ராகுல் காந்தி மிகவும் கவனமாக பேச வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 Nov 2019 6:22 AM GMT (Updated: 14 Nov 2019 6:22 AM GMT)

பிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல் காந்திக்கு எதிராக பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியே கூறிவிட்டதாகவும் அவர் பேசினார். 

இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். ராகுல் காந்திக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் போது, தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். ஆனால், ராகுல் காந்தியின் பதிலில் திருப்தி இல்லை என கூறி விரிவான விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி ராகுல் காந்தி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், மன்னிப்பு கோரி புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாகவும் கடந்த ஏப்ரல் 30ந்தேதி நடைபெற்ற விசாரணையின் போது கூறியிருந்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியை,  "திருடன்" என்று சுப்ரீம் கோர்ட்டு விமர்சித்ததாக கூறியதற்கு, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக சுப்ரீம் கோர்ட்டில்  ராகுல் காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். காவலாளியே திருடன் என்று மோடியை விமர்சிக்கும் வார்த்தையோடு, ரபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்போடு ஒப்பிட்டு தவறுதலாக பேசிவிட்டதாகவும், தனது தவறுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், காவலாளியே திருடன் என பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததற்கு எதிராக பா.ஜ.க. எம்.பி. மீனாட்சி லேகி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

ராகுல் காந்திக்கு எதிரான அவமதிப்பு மனு மீதான தீர்ப்பில் ராகுல் காந்தியின் மன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்படுகிறது.  எதிர்காலத்தில் ராகுல்காந்தி  மிகவும் கவனமாக பேச வேண்டும் என்ற எச்சரிக்கையுடன் நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

Next Story