மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு 5 அடுக்கு பாதுகாப்பு


மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு 5 அடுக்கு பாதுகாப்பு
x
தினத்தந்தி 14 Nov 2019 9:30 PM GMT (Updated: 14 Nov 2019 7:46 PM GMT)

மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை (சனிக்கிழமை) நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சபரிமலை, 

மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை (சனிக்கிழமை) நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

60 நாட்கள் சிறப்பு பூஜை

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டு 60 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து தீபாராதனை நடத்துகிறார்.

தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படும். அதன்பிறகு புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சன்னிதானத்தில் நடைபெறும். பின்னர் 18-ம் படிக்கு கீழே காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

அன்றைய தினம் மற்ற பூஜைகள் எதுவும் நடைபெறாது. பக்தர்களின் தரிசனத்துக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்படும்.

நடை திறப்பு நேரத்தில் மாற்றம்

மறுநாள் (17-ந்தேதி) அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். அன்று முதல் புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார். 17-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். பக்தர்களின் வருகையை பொறுத்து நடை திறப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்படும்.

அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி மண்டல பூஜையும், ஜனவரி 15-ந்தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.

பெண்களுக்கு அனுமதி

மண்டல-மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதால், கடந்த ஆண்டு மிகப்பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த தீர்ப்புக்கு தடை விதிக்க நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

எனவே இந்த ஆண்டும் அங்கு தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்கள் தரிசனத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், சபரிமலையில் போராட்டங்கள் நடைபெறாமல் தடுக்கவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

5 அடுக்கு பாதுகாப்பு

குறிப்பாக சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணிகளுக்கு இந்த ஆண்டு கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவார்கள் என்று கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெகரா தெரிவித்து உள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். வாகனங்களை நிறுத்துவதற்கு நிலக்கல் பகுதியில் விசாலமான இடவசதி செய்யப்பட்டு உள்ளது. நிலக்கல்லில் இருந்து கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் பம்பைக்கு இயக்கப்படும்’ என்றார்.

Next Story