ஆங்கில கல்வி திட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவது இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி திட்டவட்டம்


ஆங்கில கல்வி திட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவது இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி திட்டவட்டம்
x
தினத்தந்தி 15 Nov 2019 8:31 AM GMT (Updated: 15 Nov 2019 8:31 AM GMT)

ஆங்கில கல்வி திட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவது இல்லை என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டவட்டமாக கூறினார்.

அமராவதி,

ஆந்திர முதல்வராக கடந்த மே மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.  அந்த வகையில், அடுத்த கல்வியாண்டில் இருந்து, 6 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் பயிற்று மொழியாகவும், தெலுங்கு, உருது ஆகியவை கட்டாய பாடமாகவும் கொண்டுவர உள்ளதாக அறிவித்தார். அடுத்த 4 ஆண்டுகளில் 10 ஆம் வகுப்பு வரையிலும் ஆங்கில வழிக்கல்வி அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு, முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி, இன்றைய சவால் நிறைந்த உலகில் போட்டிப்போட ஆங்கிலம் கட்டாயம் என்றும்,  இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் தங்கள் வீட்டு குழந்தைகளை எந்த மொழியில் படிக்க வைத்தார்கள் என விளக்க வேண்டும் என்றும் பதிலடி கொடுத்து இருந்தார். 

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது;- நான் எடுத்துள்ள பணி மிகவும் சவாலானது என்று நான் அறிவேன். ஆனால், இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதால் நான் அதிலிருந்து விலக மாட்டேன். அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் தொழில்நுட்பம் வியத்தகு வளர்ச்சியை எட்ட உள்ளது. எனவே, ஆங்கில அறிவு இல்லாதவர்களால்  தாக்குப்பிடிக்க முடியாது” என்றார்.

Next Story