சந்திரயான் 2 திட்டம் தோல்வி அல்ல - மத்திய அரசு


சந்திரயான் 2 திட்டம் தோல்வி அல்ல - மத்திய அரசு
x
தினத்தந்தி 21 Nov 2019 11:35 AM GMT (Updated: 21 Nov 2019 1:43 PM GMT)

சந்திரயான் 2 திட்டம் தோல்வி அல்ல என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சந்திரயான் 2 திட்டம் தோல்வி என்று கூறுவது நியாயமற்றது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில், இன்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.இ மனாஸ் ரஞ்சன் புனியா சந்திரயான் 2 திட்டம் பற்றி கேள்வி எழுப்பினார். இக்கேள்விக்கு பதிலளித்த விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங், கூறியதாவது:- “ சந்திரயான் 2 திட்டம் அனைவராலும் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்த திட்டமாகும்.

உறுப்பினர் குறிப்பிட்டது போல, சில ஏமாற்றங்கள் நேர்ந்திருக்கலாம். அதேவேளையில், சந்திராயன் 2 திட்டத்தை தோல்வி என்று வரையறுப்பது நியாயமாக இருக்காது. உலகின்  எந்த ஒரு நாடும்  இரண்டு முயற்சிகளுக்கும்  குறைவாக நிலவில் சாப்ட் லேண்டிங்கை வெற்றிகரமாக செய்தது கிடையாது.  அமெரிக்கா, விண்வெளி பயணத்தை எப்போதோ தொடங்கி விட்டது. ஆனாலும் அந்த நாட்டால், 7 முயற்சிகளுக்கு பிறகு 8-வது முயற்சியாகவே நிலவில் சாப்ட் லேண்டிங் செய்ய முடிந்தது” என்றார்.

தொடர்ந்து, துணைக்கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த ஜிதேந்திர சிங், சந்திரயான் 2 திட்டத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பம் என இரண்டு வகையான அம்சங்கள் இருந்தன.  "விஞ்ஞான நோக்கங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டன, இதில் சந்திரன் மேற்பரப்பு மேப்பிங், இடவியல் ஆய்வுகள், ரேடார் அடிப்படையிலான ஆய்வுகள் போன்றவை அடங்கும்.

தொழில் நுட்ப அடிப்படையில்,  வெற்றிகரமாக ஏவப்பட்டது, புவி வட்டப்பாதை மற்றும், சந்திரனின் சுற்றுவட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது. நீங்கள் கூறியது போல ஆர்பிட்டர் மிகவும் சிறப்பாக உள்ளது. அடுத்தடுத்த முயற்சிகளில் நம்முடைய இஸ்ரோ சிறப்பாகச்செயல்பட்டுக் குறைந்த செலவில் அடுத்த முயற்சியைத் தொடங்கும். சந்திரயான் விண்கலத்திலிருந்த ஆர்பிட்டர், அது செயல் இழக்கும் வரை கடைசி 30 நிமிடங்கள்வரை சிறப்பாகவே செயல்பட்டது. ஆதலால் அதைத் தோல்வி என வர்ணிக்க முடியாது"என்றார்.

Next Story