விலை உயர்வை கட்டுப்படுத்த மேலும் 11 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி


விலை உயர்வை கட்டுப்படுத்த மேலும் 11 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி
x
தினத்தந்தி 1 Dec 2019 9:15 PM GMT (Updated: 1 Dec 2019 8:36 PM GMT)

விலை உயர்வை கட்டுப்படுத்த மேலும் 11 ஆயிரம் டன் வெங்காயத்தை பொதுத்துறை நிறுவனம் இறக்குமதி செய்கிறது.

புதுடெல்லி,

சமையலுக்கு அத்தியாவசியமான பொருளான வெங்காயத்தின் விலை உயர்ந்தபடி இருக்கிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. வியாபாரிகள், வெங்காயத்தை இருப்பு வைக்க உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது.

வெங்காயத்தின் விலையை கண்காணிக்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் மந்திரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எம்.எம்.டி.சி., மாநிலங்களுக்கு வினியோகம் செய்வதற்காக, வெங்காயத்தை இறக்குமதி செய்து வருகிறது. ஏற்கனவே 6 ஆயிரத்து 90 டன் வெங்காயம் இறக்குமதி செய்ய ஆர்டர் கொடுத்தது. அந்த வெங்காயம் இம்மாதம் இரண்டாவது வாரத்தில் மும்பை துறைமுகம் வந்து சேருகிறது.

இதையடுத்து, மேலும் 11 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய எம்.எம்.டி.சி. ‘ஆர்டர்’ கொடுத்துள்ளது. இந்த வெங்காயம், துருக்கியில் இருந்து வருகிறது. அடுத்த மாதம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம், உள்நாட்டில் வெங்காய வரத்து அதிகரிக்கும் என்றும், அதன் விலை குறையும் என்றும் கருதப்படுகிறது.

கடந்த மாதம் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில், மத்திய அரசு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்து.

Next Story