கும்பல் கொலையை தடுக்க சட்ட திருத்தம் - அமித்ஷா தகவல்


கும்பல் கொலையை தடுக்க சட்ட திருத்தம் - அமித்ஷா தகவல்
x
தினத்தந்தி 4 Dec 2019 11:15 PM GMT (Updated: 4 Dec 2019 10:20 PM GMT)

கும்பல் கொலையை தடுக்க இந்திய தண்டனை சட்டத்தில் தேவையான திருத்தங்களை பரிந்துரை செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமித் ஷா கூறினார்.

புதுடெல்லி,

கும்பல் வன்முறை மூலம் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இத்தகைய கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

நேற்று மாநிலங்களவையில், கேள்வி நேரத்தின்போது இதுதொடர்பான கேள்விகளுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்தார். அவர் பேசியதாவது:-

கும்பல் கொலைகளை தடுக்க இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகியவற்றில் உரிய திருத்தங்கள் கொண்டுவரப்படும். என்னென்ன திருத்தங்கள் செய்யலாம் என்று பரிந்துரைகள் அனுப்புமாறு அனைத்து மாநில கவர்னர்களுக்கும், முதல்-மந்திரிகளுக்கும் நான் கடிதம் எழுதி உள்ளேன்.

மேலும், திருத்தங்கள் குறித்து பரிந்துரை செய்வதற்காக, போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின்கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகள் கிடைத்த பிறகு, திருத்தங்கள் செய்யும் பணியை தொடங்குவோம். அப்படி செய்யும்போது, சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புகளை மனதில் கொள்ளுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:-

அடித்துக் கொல்லுதல் என்பதற்கு இந்திய தண்டனை சட்டத்தில் எந்த விளக்கமும் இல்லை. இருப்பினும், இத்தகைய குற்றங்களை இந்திய தண்டனை சட்டத்தின் 300 மற்றும் 302-வது பிரிவுகளை பயன்படுத்தி ஒடுக்கலாம்.

கொலை செய்பவருக்கு மரண தண்டனை அல்லது வாழ்நாள் முழுவதும் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கலாம் என்று 302-வது பிரிவு கூறுகிறது. இந்த குற்றம், ஜாமீனில் விட முடியாதது ஆகும்.

கும்பல் கொலைகளை தடுப்பதற்கான சட்டத்தை கொண்டு வருவது குறித்து பரிசீலிக்க மந்திரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர், ராஜஸ்தான் மாநில அரசுகள், கும்பல் கொலைகளை தடுக்க தனிச்சட்டங்கள் இயற்றி உள்ளன. அவை மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.

கும்பல் வன்முறையை தூண்டக்கூடிய பொய் செய்திகள், வதந்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இத்தகைய பொய்ச் செய்திகளை நீக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story