ஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் தொடங்கியது


ஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் தொடங்கியது
x
தினத்தந்தி 9 Dec 2019 8:22 AM GMT (Updated: 9 Dec 2019 8:22 AM GMT)

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. மனு தாக்கல் செய்ய வருகிற 16-ந்தேதி கடைசி நாளாகும்.

சென்னை,

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து இதர மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என தீர்ப்பளித்தது.

அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 91,975 பதவி இடங்களை நிரப்பிட இத்தேர்தல் நடைபெறுகிறது. 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5090 ஊராட்சி, ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9624 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி இடங்கள் அடங்கும்.

கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையிலும் நடைபெறும்.

முதல் கட்டத்தில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊரக வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 2546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 4700 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 37830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி இடங்களுக்கும் வருகிற 27-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

இரண்டாம் கட்டத்தில் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 2544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 4924 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 38916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் வருகிற 30-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும்.

முதல்கட்ட தேர்தல் 24,680 வாக்குச்சாவடிகளிலும், 2-ம் கட்ட தேர்தல் 25,008 வாக்குச்சாவடிகளிலும் என மொத்தம் 49,688 வாக்குச் சாவடிகளில் நடைபெற உள்ளது.

முதல்கட்ட தேர்தலில் 1 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள், 2-ம் கட்ட தேர்தலில் 1 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

டிச. 27 மற்றும் 30ம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் ஊராட்சிகளின் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. எந்தெந்த நாட்களில் எந்தெந்த ஊராட்சிகளுக்கு தேர்தல் என்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சி அலுவலக செயலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். மனு தாக்கல் செய்ய வருகிற 16-ந்தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் 17-ந்தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. மனுக்களை திரும்பப்பெற 19-ந்தேதி கடைசி நாளாகும்.

27, 30-ந்தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. ஜனவரி 2-ந்தேதி ஓட்டுக்கள் எண்ணப்படும். வெற்றி பெற்றவர்கள் ஜனவரி 6-ந்தேதி பதவி ஏற்கின்றனர். அந்தந்த உள்ளாட்சி மன்ற தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 3 ஆயிரத்து 537 ஊரக - உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஏராளமானோர்  வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்களை பெற, தேர்தல் நடத்தும் 26 அலுவலர்கள் மற்றும்
 524 உதவி அலுவலர்கள் மனுக்களை பெற்று வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. முதல் நாளான இன்று அரசியல் கட்சிகள் அல்லாத சுயேச்சைகள் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மதுரை தல்லாகுளம்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மதுரை மாவட்டத்தில்13 ஒன்றியங்களிலுள்ள ஊரக ஊராட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளநிலையில், காலை முதலே பலரும் ஆர்வமுடன் தாக்கல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஒன்றியம் மற்றும் 497 ஊராட்சிகளில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று, அதனை பூர்த்தி செய்து தாக்கல் செய்தனர். 

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரைச் சேர்ந்தவர் தேர்தல் மன்னன் பத்மராஜன்(60). இவர் கனரக வாகனங்களின் டயர்களை வல்கனைசிங் செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி ஸ்ரீஜா, மகன் ஸ்ரீஜேஷ் உள்ளனர்.

இவர் கின்னஸில் இடம் பெற வேண்டி தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். இதில் வார்டு கவுன்சிலர் பதவி முதல் குடியரசுத்தலைவர் தேர்தல் வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதில் தமிழக மற்றும் இந்திய அளவிலான தலைவர்களை எதிர்த்தும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த மாதம் 25 -ம் தேதி கர்நாடக ராஜ்ய சபா இடைத்தேர்தலுக்கு வேட்புமனுவை தாக்கல் செய்திருந்த அவர், தற்போது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், சேலம் மாவட்டம் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகத்தில் சேலம் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 3-வது வார்டுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி குமரவேலிடம் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார். இது அவருக்கு 209 -வது தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story