குடியுரிமை மசோதாவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் ; திரிபுராவில் இணைய சேவை முடக்கம்


குடியுரிமை மசோதாவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் ;  திரிபுராவில் இணைய சேவை முடக்கம்
x
தினத்தந்தி 11 Dec 2019 4:10 AM GMT (Updated: 11 Dec 2019 4:10 AM GMT)

குடியுரிமை மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

புதுடெல்லி,

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31 ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன் தினம் நிறைவேற்றப்பட்டது. இன்று மாநிலங்களவையில், இந்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்கிறார். 

இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பாலோர் வடகிழக்கு மாநிலங்களில் குடியேறி உள்ளனர். இவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறபோது, தங்கள் நலன் பாதிக்கப்படும் என அந்த மாநில மக்கள் எதிர்க்கின்றனர். இருப்பினும் இந்த மசோதா வரம்பில் இருந்து அசாம், மேகாலயா, மிஜோரம், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடியினர் வசிக்கிற வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் விலக்கு தரப்பட்டுள்ளது.

குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் நேற்று 11 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்தின் போது பல இடங்களில் வன்முறையும் வெடித்தது. குறிப்பாக  திரிபுராவில் உள்ள மனுகாட் பகுதியில் திறந்திருந்த கடைகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். கடைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த வன்முறையில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

வன்முறை காரணமாக  திரிபுராவில் இணையதள சேவை, மற்றும் செல்போன் குறுஞ்செய்தி சேவை ஆகியவை 48 மணி நேரத்திற்கு   முடக்கப்பட்டுள்ளன. 

Next Story