சபரிமலையில் பேட்டை துள்ளல்: அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர்


சபரிமலையில் பேட்டை துள்ளல்: அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 12 Jan 2020 8:22 PM GMT (Updated: 12 Jan 2020 8:22 PM GMT)

சபரிமலையில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி ஏராளமான அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர்.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜை கடந்த மாதம் 27-ந் தேதி நடந்தது. அன்றைய தினம் சாமி அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் இரவு நடை அடைக்கப்பட்டது.

மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந் தேதி திறக்கப்பட்டது. முதல் நாளில் இருந்து சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மகரவிளக்கு பூஜை நாளை மறுநாள் (புதன் கிழமை) நடைபெறுவதால் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அங்கேயே முகாமிட தொடங்கி உள்ளனர். இதனால், சபரிமலையில் எங்கு பார்த்தாலும் அய்யப்ப பக்தர்களாக காட்சி அளிக்கிறார்கள்.

மகரவிளக்கு பூஜைக்கு முன்னதாக பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன்படி அய்யப்ப பக்தர்களின் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நேற்று பிற்பகல் நடந்தது. அம்பலபுழா மற்றும் ஆலங்காடு அய்யப்ப பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து தனித்தனி குழுவாக எரிமேலியில் சரணகோஷம் முழங்கி ஆடிப்பாடி வந்தனர்.

மகரவிளக்கு பூஜை அன்று சாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரண ஊர்வலம் இன்று (திங்கட்கிழமை) பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்படுகிறது. ஊர்வலம் நாளை மறுநாள் பிற்பகல் சபரிமலை சன்னிதானத்தை வந்தடையும். அங்கிருந்து 18-ம்படி வழியாக கொண்டு செல்லப்பட்டு சாமி அய்யப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு அன்று மாலை மகர விளக்கு பூஜை நடக்கிறது.

மகரவிளக்கு பூஜையின் போது சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறும். இதையொட்டி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள் என்பதால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.


Next Story