சபரிமலை கோவில் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை இல்லை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


சபரிமலை கோவில் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை இல்லை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 13 Jan 2020 5:40 AM GMT (Updated: 13 Jan 2020 8:09 PM GMT)

சபரிமலை கோவில் தொடர்பான வழக்கில் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை இல்லை என்றும், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் பற்றி விசாரிக்கப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை என்ற நடைமுறைக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு, சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.

இதற்கிடையே, சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தரப்பில் 61 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், ரோகின்டன் பாலி நாரிமன், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த விவகாரத்தை 9 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றி கடந்த நவம்பர் 14-ந்தேதி உத்தரவிட்டு தீர்ப்பு அளித்தது.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது மட்டுமின்றி, மசூதிகளில் முஸ்லிம் பெண்களை அனுமதிப்பது பற்றியும், பிற மதங்களை சேர்ந்த ஆண்களை திருமணம் செய்த பார்சி பெண்களை தங்கள் வழிபாட்டு தலங்களில் அனுமதிப்பது குறித்தும், தாவூதி போரா இன பெண்கள் தொடர்பான சில பிரச்சினைகளையும் இந்த அமர்வு விசாரிக்கும் என அப்போது நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கருத்தில் கொள்ள வேண்டிய 7 அடிப்படையான அம்சங்கள் பற்றியும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், எல்.நாகேஸ்வர ராவ், மோகன் எம்.சந்தான கவுடர், எஸ்.அப்துல் நசீர், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகிய 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும், அய்யப்பன் கோவில் கமிட்டி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, “இந்த அமர்வு மறுஆய்வு மனுக்களை விசாரணைக்கு எடுக்கப்போவது இல்லை. நவம்பர் 14-ந்தேதியன்று 5 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள 7 அம்சங்கள் குறித்து மட்டுமே விசாரிக்கும். மேலும் சபரிமலை, மசூதிகள் ஆகியவற்றில் பெண்களை அனுமதிப்பது குறித்தும் பார்சி இனத்தவர்களின் ஆலயங்களில் வேற்று இனத்தவர்களை திருமணம் செய்த பார்சி இனத்து பெண்களை அனுமதிப்பது பற்றியும், தாவூதி போரா இன பெண்கள் தொடர்பான விவகாரங்கள் உள்ளிட்ட நிலுவையில் உள்ள முக்கியமான அம்சங்கள் பற்றி மட்டுமே விசாரிக்க விரும்புகிறோம்” என்றார்.

இதைத்தொடர்ந்து வாதிட்ட மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங், “சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது என்ற தீர்ப்பை இதுவரை எந்த நீதிமன்றமும் சட்டத்துக்கு விரோதமானது என்று கூறவில்லை என்றும், சிரூர் மடம் தொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் விசாரித்து முடிவெடுத்ததால் இந்த மனுக்களை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி இருக்கலாம்” என்றும் கூறினார்.

மற்றொரு மூத்த வக்கீலான ராஜீவ் தவான் வாதாடுகையில், ஒரு நபருடைய மத வழிபாடு முறை பற்றி கோர்ட்டு தீர்மானிக்க முடியாது என்றார்.

மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி வாதாடுகையில், 2018-ம் ஆண்டு நவம்பர் 14-ந்தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் விசாரணைக்கு முன்வைக்கப்பட்ட 7 அம்சங்கள் விரிவாக உள்ளன என்றும், ஆனால் அவை மேலும் தெளிவாகவும் குறிப்பான கேள்விகளை எழுப்பும் வகையில் இருந்திருக்கலாம் என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வக்கீல்கள் ஒன்று கூடி அமர்ந்து தற்போது விசாரிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து ஒருசேர முடிவெடுக்கலாம். யார் எந்த அம்சம் குறித்து வாதிக்கலாம், எந்த அடிப்படையில் வாதங்களை முன்வைக்கலாம் என்பது பற்றி வக்கீல்கள் தங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.

அயோத்தி வழக்கில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ராஜீவ் தவான் ஆகியோர் தங்களுடைய வாதங்களின் எல்லையை மிகவும் அற்புதமாக வரையறுத்துக்கொண்டார்கள். அதையே இந்த வழக்கிலும் நாம் கடைபிடிக்கலாம். இந்த மனுக்கள் மீதான விசாரணையில் ஒவ்வொரு தரப்பு வக்கீலின் வாதமும் கேட்கப்படும். சுப்ரீம் கோர்ட்டின் பொதுச்செயலாளர் இது தொடர்பாக ஒரு கூட்டத்தை கூட்டி விசாரணையை தெளிவாக எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்க வேண்டும்.

அதன்படி இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் பொதுச்செயலாளர், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வக்கீல்களான அபிஷேக் சிங்வி, ராஜீவ் தவான், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் அடங்கிய கூட்டத்தை வருகிற 17-ந்தேதி கூட்டி 3 வாரங்களில், வழிபாடு பிரச்சினையில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் உள்ளிட்ட சில விஷயங்கள் பற்றி முடிவு செய்ய வேண்டும்.

அதாவது ஏற்கனவே 5 நீதிபதிகள் முன்வைத்துள்ள 7 அம்சங்களில் ஏதாவது அம்சத்தில் எதையாவது கூட்டவோ, நீக்கவோ, மறுவடிவமைக்கவோ தேவை இருக்கிறதா? ஒவ்வொரு அம்சம் குறித்து விவாதிக்க தேவைப்படும் கால அவகாசம் எவ்வளவு? ஒவ்வொரு தரப்பு வாதத்துக்கும் எவ்வளவு நாள் தேவைப்படும் என்பது பற்றி தீர்மானிக்கவேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

மேற்கண்ட உத்தரவை பிறப்பித்த பின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.


Next Story