இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 75 ஆக உயர்வு


இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 75 ஆக உயர்வு
x
தினத்தந்தி 4 April 2020 3:20 PM GMT (Updated: 4 April 2020 3:20 PM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் மக்களிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.  கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.  கடந்த மார்ச் 24ந்தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அன்று நள்ளிரவு முதல் வரும் 14ந்தேதி வரை அமலில் இருக்கும்.  இதனால் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 56ல் இருந்து 62 ஆக நேற்று உயர்ந்தது.  நாட்டில் கொரோனா பாதித்தோரில் அதிக எண்ணிக்கையுடன் மராட்டியம் முதல் இடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும், கேரளா 3வது இடத்திலும் உள்ளன.

இதேபோன்று இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,301ல் இருந்து 2,547 ஆக அதிகரித்து இருந்தது.  இதுவரை சிகிச்சை பெற்றோரில் வீடு திரும்பியோர் எண்ணிக்கை 163 ஆக இருந்தது.

இந்நிலையில், மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 537 ஆக இன்று உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 485 ஆகவும், கேரளாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 306 ஆகவும் உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் பாதிப்பு எண்ணிக்கை 3,072 ஆக உயர்ந்தது.

இதேபோன்று பலி எண்ணிக்கை 62ல் இருந்து 75 ஆக உயர்ந்து உள்ளது.  இவற்றில் 42 சதவீதத்தினர் 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.  32 சதவீதத்தினர் 41 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் என சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.  பிறந்த குழந்தை முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் 9 சதவீதத்தினராகவும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 17 சதவீதத்தினராகவும் உள்ளனர் என அமைச்சகம் தெரிவிக்கின்றது.

Next Story