கொரோனா சிகிச்சை; 40 ஆயிரம் படுக்கைகள் தயார்: இந்திய ரெயில்வே அறிவிப்பு


கொரோனா சிகிச்சை; 40 ஆயிரம் படுக்கைகள் தயார்:  இந்திய ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 6 April 2020 9:31 AM GMT (Updated: 6 April 2020 9:31 AM GMT)

கொரோனா சிகிச்சைக்காக 40 ஆயிரம் படுக்கைகளை இந்திய ரெயில்வே முதற்கட்டத்தில் தயார்படுத்தி உள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் நாட்டில் தீவிரமுடன் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.  கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமுடன் மேற்கொண்டு வருகிறது.

நாட்டில் கொரோனா பாதித்தோரில் அதிக எண்ணிக்கையுடன் மராட்டியம் முதல் இடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும் உள்ளன.  தொடர்ந்து டெல்லி மற்றும் கேரளா இந்த வரிசையில் உள்ளன.

இந்த பாதிப்பு எண்ணிக்கை மராட்டியத்தில் 690 ஆகவும், தமிழகத்தில் 571 ஆகவும் நேற்று உயர்ந்து உள்ளது.

இந்நிலையில், மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளது.  45 பேர் பலியாகி உள்ளனர்.  நாட்டில் 4,200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் ஆனது, ரெயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளது.

இதுபற்றி ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ‘ரெயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றுவதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன், ரெயில்வே மண்டலங்களில் அதற்கான பணிகள் உடனடியாக தொடங்கின.  சராசரியாக, நாள் ஒன்றுக்கு 375 பெட்டிகள் தனி வார்டுகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

இதற்காக நாட்டின் 133 இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன.  இதன்படி, 2 ஆயிரத்து 500 பெட்டிகள் முதற்கட்டத்தில் தனி வார்டுகளாக மாற்றப்பட்டு உள்ளன.  இதனால் 40 ஆயிரம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் பயன்படுத்துவதற்கு தயாராக உள்ளன’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று மற்றொரு 2 ஆயிரத்து 500 பெட்டிகளை தனி வார்டுகளாக உருவாக்கும் அடுத்த கட்ட பணிகள் நடைபெற உள்ளன.

Next Story