மேற்கு வங்காளத்தில் ஒரே நேரத்தில் 185 செவிலியர்கள் ராஜினாமாவால் அதிர்ச்சி


மேற்கு வங்காளத்தில் ஒரே நேரத்தில் 185 செவிலியர்கள் ராஜினாமாவால் அதிர்ச்சி
x
தினத்தந்தி 16 May 2020 5:40 AM GMT (Updated: 16 May 2020 6:42 AM GMT)

நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் 4வது இடத்தில் உள்ள மேற்கு வங்காளத்தில் ஒரே நேரத்தில் 185 செவிலியர்கள் ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்புக்கு 2,461 பேர் தீவிர சிகிச்சை பெற்றும், 829 பேர் பாதிப்பில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியும் உள்ளனர்.  இதுவரை 225 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால் நாட்டில் அதிக பலி எண்ணிக்கையில் மராட்டியம், குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்திற்கு அடுத்து 4வது இடத்தில் மேற்கு வங்காளம் உள்ளது.

மேற்கு வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகளில் செவிலியர்களாக பிற மாநிலங்களை சேர்ந்தவர்களே பணியாற்றி வருகின்றனர்.  இவர்களில் மணிப்பூரை சேர்ந்த செவிலியர்கள் 2 ஆயிரம் பேர் வரை பணிபுரிகின்றனர்.  இதனை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த செவிலியர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் பின்னடைவாக, செவிலியர்கள் பலர் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.  மணிப்பூரை சேர்ந்த 185 செவிலியர்கள் மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்துள்ளனர்.  இந்த சூழலில், ஒரே நாளில் அவர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விட்டு சொந்து ஊருக்கு சென்று விட்டனர்.

இதேபோன்று பிற வடகிழக்கு மாநில செவிலியர்களும் மற்றும் ஒடிசாவை சேர்ந்த செவிலியர்களும் ராஜினாமா செய்ய கூடும் என கூறப்படுகிறது.  எனினும் அதிக எண்ணிக்கையில் செவிலியர்கள் பணியில் இருந்து விலகியதற்கான சரியான காரணம் எதுவும் வெளிவரவில்லை.

கொரோனா பாதிப்பு நெருக்கடியில் மேற்கு வங்காள அரசு மற்றும் மக்கள் சிக்கியுள்ள நிலையில், செவிலியர்களின் இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story