காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் பயங்கரவாதி சுட்டு கொலை


காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் பயங்கரவாதி சுட்டு கொலை
x
தினத்தந்தி 19 May 2020 9:03 AM GMT (Updated: 19 May 2020 9:03 AM GMT)

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகர் அருகே உள்ள நவகடல் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இந்த தகவலின் பேரில் நேற்றிரவு அந்த பகுதிக்கு சென்று காஷ்மீர் போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் இணைந்து குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு மறைவிடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி அதிகாலை வேளையில் துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையாக துப்பாக்கிச்சண்டை நடந்தது.  தொடர்ந்து 5 மணிநேரம் இந்த சண்டை நீடித்தது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகரில் மொபைல் இணைய சேவை மற்றும் தொலைபேசி சேவைகள் முடக்கப்பட்டன.  இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் மீண்டும் சண்டை தொடர்ந்தது.

இதில், ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.  அவரது அடையாளம் மற்றும் அவர் சார்ந்த குழு ஆகியவை பற்றி உறுதிப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.  சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் மற்றும் காஷ்மீர் போலீசார் என பாதுகாப்பு படையை சேர்ந்த 2 பேர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story