ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரு கோடி பேர் பயனடைந்திருக்கிறார்கள் -பிரதமர் மோடி பெருமிதம்


ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரு கோடி பேர் பயனடைந்திருக்கிறார்கள் -பிரதமர் மோடி பெருமிதம்
x
தினத்தந்தி 20 May 2020 6:38 AM GMT (Updated: 20 May 2020 6:38 AM GMT)

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரு கோடி பேர் பயனடைந்திருக்கிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கடந்த 2018- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரதமர் மோடி ஆயுஷ் மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தினார். உலகின் மிகப்பெரிய அரசு  சுகாதார காப்பீடு திட்டமாக கருதப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் தரமான சிகிச்சையை ஏழைகள் இலவசமாக பெற முடியும்.  

நாட்டில் உள்ள 10 கோடி ஏழை குடும்பங்கள் மருத்துவக்காப்பீடு பெறும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட உள்ளது. ஒட்டு மொத்தமாக 50 கோடி மக்கள் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு பெறும் வகையில் திட்டம் செய்லபடுத்தப்படுகிறது. 

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளர்களின்  எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியிருப்பது ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ள செய்கிறது என பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.  இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆயுஷ்மான் பாரத் திட்ட முன்னெடுப்பு பல பேருக்கு பயனளித்து வருகிறது. 

ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் இந்தியர்கள், குறிப்பாக ஏழைகளின் நம்பிக்கையை பெற முடிந்தது. பயனாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், நலமுடன் இருக்க பிரார்த்தனை செய்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story