"ஒரு அங்குல நிலப்பரப்பையும் விட்டுக்கொடுக்க மாட்டோம்" -சீன ஊடகம் எச்சரிக்கை


ஒரு அங்குல நிலப்பரப்பையும் விட்டுக்கொடுக்க மாட்டோம் -சீன ஊடகம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 Jun 2020 3:25 AM GMT (Updated: 6 Jun 2020 3:25 AM GMT)

இந்தியா- சீனா பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே "ஒரு அங்குல நிலப்பரப்பையும் விட்டுகொடுக்க மாட்டோம்" என சீன ஊடகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

புதுடெல்லி

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. லடாக்கில் எல்லை பகுதியில் சீன வீரர்கள் அவ்வப்போது அத்துமீறி இந்திய பகுதிக்குள் நுழைய முயற்சிப்பதும், அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்துவதும் நடந்து வருகிறது. 

லடாக் மீது சீனா பல வருடங்களாக கண் வைத்து இருந்தது. தற்போது இருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி லடாக் மற்றும் சிக்கிமில் சீனா அத்துமீற நினைக்கிறது.

அங்கிருக்கும் கரி குன்ஷா விமான நிலையம் அருகே சீனா விமான தளம் அமைத்துள்ளது. லடாக் அருகே தாக்குதல் நடத்தும் வகையில் சீனா இப்படி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி சீனாவின் உளநாட்டு தயாரிப்பில் உருவான விமானங்களை வைத்து சீனா தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சீனா கண்டிப்பாக அமைதியை விரும்பவில்லை. இந்தியாவை சீண்டவே நினைக்கிறது என்கிறார்கள்.அங்குள்ள பங்கோங் சோ ஏரி பகுதியில் இதேபோல் சீன வீரர்கள் கடந்த 5 மற்றும் 6-ந் தேதிகளில் அத்துமீறி நுழைய முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும், மோதலும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்கு இரு நாட்டு ராணுவமும் குவிக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. 

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர இருதரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டும் சுமூக முடிவும் எதுவும் எட்டப்படவில்லை.

இதைதொடர்ந்து, இந்திய தரப்பில் லெப்டினண்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான குழு, சீன உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் குழுவுடன் எல்லைப்பகுதியில் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.

இந்த நிலையில் இந்தியா- சீனா பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே "ஒரு அங்குல நிலப்பரப்பையும் விட்டுக்கொடுக்க மாட்டோம்" என சீன ஊடகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதுகுறித்து சீன அரசின் ஊடகமான குளோபல் டைம்ஸ் கூறி உள்ளதாவது:-

"சீனா இந்தியாவை வேண்டும் என பிடிக்க விரும்பவில்லை. கடந்த பல ஆண்டுகளாக நல்ல அண்டை நாட்டு உறவுகள் சீனாவின் அடிப்படை தேசியக் கொள்கையாக கொண்டுள்ளோம். மேலும் சீனா எல்லை தகராறுகளின் அமைதியான தீர்மானத்தை உறுதியாகக் கடைப்பிடிக்கிறது. இந்தியாவை எங்கள் எதிரியாக மாற்ற எங்களுக்கு எந்த தேவையும் இல்லை.

ஆனால் சீனா ஒரு அங்குல நிலப்பரப்பையும் விட்டுக்கொடுக்காது. இந்தியா ஒரு தவறான முடிவில் சீனாவின் எல்லைக்குள் வந்தால், சீனா அதை ஒருபோதும் மன்னிக்காது. சீனா வலுவான எதிர் நடவடிக்கைகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எல்லைப் பகுதியில் சீனா-இந்தியா இராணுவ நடவடிக்கைகளில் சீனா பாதகமாக இருக்காது என்பதை இந்தியா நன்கு அறிந்திருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.

இரு நாடுகளும் எல்லைப் பிரச்சினையில் ஒரு மோதலை எதிர்கொண்டால், முழு இமயமலைப் பகுதியும் இந்தியத் துணைக் கண்டமும் உறுதியற்ற தன்மையை எதிர்கொள்ளும். எந்த வெளி சக்தியும் இதை மாற்ற முடியாது. எல்லைப் பகுதிகளில் அமைதியைப் பேணுதல் மற்றும் நட்பு ஒத்துழைப்பு இரு நாடுகளின் நலன்களுக்கு ஏற்ப உள்ளது.

"இந்தியா மீதான சீனா தனது நட்புக் கொள்கையை தெளிவுபடுத்தியுள்ளதால், அமெரிக்காவால் ஏமாற்றப்படுவதற்குப் முன் இந்தியா தயவுசெய்து திரும்பி வர வேண்டும். சீனாவின் மூலோபாய நிலைமை அவ்வளவு கொடூரமானதல்ல. அமெரிக்க அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்சாததால், அமெரிக்க ஆதரவைப் பயன்படுத்த சில சக்தியை நாம் எவ்வாறு அனுமதிக்க முடியும் சீனாவுக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டுமா? என அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story