கொரோனா அச்சம்; குப்பை கூடைகளை ஸ்டிரெச்சரில் கொண்டு சென்ற அவலம்


கொரோனா அச்சம்; குப்பை கூடைகளை ஸ்டிரெச்சரில் கொண்டு சென்ற அவலம்
x
தினத்தந்தி 11 Jun 2020 4:21 PM GMT (Updated: 11 Jun 2020 4:21 PM GMT)

பஞ்சாபில் கொரோனா பரவும் என்ற அச்சத்தில் குப்பை கூடைகளை ஸ்டிரெச்சர் மற்றும் சக்கர நாற்காலிகளில் கொண்டு சென்ற அவலம் நேர்ந்துள்ளது.

சண்டிகர்,

பஞ்சாபில் கொரோனாவுக்கு இன்று 82 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  4 பேர் பலியாகி உள்ளனர்.  இதுவரை கொரோனா தொற்றுக்கு 2 ஆயிரத்து 259 பேர் பஞ்சாபில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  அவர்களில் 569 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  2,259 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர் என பஞ்சாப் சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

பஞ்சாபில் அமிர்தசரஸ் நகரில் உள்ள குரு நானக் தேவ் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இங்குள்ள தூய்மை பணியாளர்கள் குப்பை கூடைகளை எடுத்து செல்வதற்கு சக்கர நாற்காலிகள் மற்றும் ஸ்டிரெச்சர்களை பயன்படுத்துகின்றனர்.

நாட்டில் சில இடங்களில் நோயாளிகளுக்கு தேவையான ஆம்புலன்ஸ் வசதிகளோ, படுக்கை மற்றும் ஸ்டிரெச்சர் வசதிகளோ இல்லாத சூழல் காணப்படுகிறது.  எனினும் கொரோனா பரவ கூடும் என்ற அச்சத்தினால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது காண்போரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி டாக்டர் ஜுகல் கிஷோர் என்ற அறுவை சிகிச்சை நிபுணர் கூறும்பொழுது, கொரோனா வைரஸ் பரவுவதற்கும், கழிவு பொருட்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.  ஏன் இப்படி செய்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை.  எனினும் இது மிக தவறானது என்று கூறியுள்ளார்.

Next Story