கேரளாவில் இன்று புதி்தாக 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கேரளாவில் இன்று புதி்தாக 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 13 Jun 2020 5:35 PM GMT (Updated: 13 Jun 2020 5:35 PM GMT)

கேரளாவில் இன்று புதிதாக 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து  திரும்பும் நபர்களால் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில், இன்று புதி்தாக 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 15 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 14 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 12 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். எஞ்சியவர்களில் தலா 9 பேர் ஆலப்புழா, காசர்கோடு மாவட்டங்களையும், 8 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 7 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், தலா 4 பேர் இடுக்கி, திருச்சூர் மாவட்டங்களையும், தலா ஒருவர் பத்தனம்திட்டா, கோட்டயம், வயநாடு மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 53 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 18 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். இன்று 46 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதையடுத்துக் கேரளாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,045 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,342 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 2,33,429 பேர் வீடுகளிலும், 1,989 பேர் மருத்துவமனையிலும் கண்காணிப்பில் உள்ளனர்.

Next Story