லடாக் விவகாரம் பற்றிய பிரதமர் கருத்து:ராகுல் காந்தி-அமித்ஷா மோதல்


லடாக் விவகாரம் பற்றிய பிரதமர் கருத்து:ராகுல் காந்தி-அமித்ஷா மோதல்
x
தினத்தந்தி 20 Jun 2020 10:45 PM GMT (Updated: 20 Jun 2020 8:00 PM GMT)

லடாக் விவகாரம் பற்றி பிரதமர் மோடி தெரிவித்த கருத்து தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ந் தேதி இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே குறை கூறி வருகிறது.

இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று முன்தினம் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, லடாக் பகுதியில் நடந்த மோதலின் போது இந்திய பகுதிக்குள் சீன படைகள் ஊடுவவில்லை என்றும், அவர்கள் இந்தியாவின் எந்த நிலைகளையும் பிடிக்கவில்லை என்றும் கூறினார்.

இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும், உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி கூறியதற்கு பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், “பிரதமர் மோடி இந்திய பகுதியை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டார். அந்த நிலம் சீனாவுக்கு சொந்தமானது என்றால் அங்கு நமது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது ஏன்? அவர்கள் எந்த இடத்தில் கொல்லப்பட்டார்கள்?“ என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடியை பாதுகாக்கும் வகையில் மூத்த மந்திரிகள் பொய் சொல்வதாகவும் அதில் அவர் குற்றம்சாட்டி இருக்கிறார். இதற்கு உள்துறை மந்திரி அமித்ஷா பதிலடி கொடுத்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ராகுல் காந்தி மலிவான அரசியல் செய்வதை விட்டுவிட்டு தேசிய நலனை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என்று கூறி இருக்கிறார்.

அத்துடன் லடாக் மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரின் தந்தை பேசிய வீடியோ பதிவையும் அமித்ஷா வெளியிட்டு இருக்கிறார். துணிச்சல்மிக்க அந்த ராணுவ வீரரின் தந்தை வெளியிட்டுள்ள செய்திதான் ராகுல் காந்திக்கு உரிய பதில் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அந்த வீடியோ பதிவில், “சீன ராணுவத்தை தோற்கடிக்கும் வலிமை இந்திய ராணுவத்துக்கு உண்டு. இந்த விவகாரத்தை ராகுல் காந்தி அரசியல் ஆக்க வேண்டாம். என் மகன் ராணுவத்தில் இருக்கிறான். அவன் தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்றுவான். நாட்டுக்காக போரிடுவான்“ என்று அந்த ராணுவ வீரரின் தந்தை கூறி உள்ளார்.

இதற்கிடையே, இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை என்ற பிரதமரின் கருத்து குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “கல்வான் பள்ளத்தாக்கு பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடுகிறது. இதற்கு இந்திய அரசின் பதில் என்ன? சீனாவின் இந்த கருத்தை இந்தியா நிராகரிக்குமா? இதற்கு மத்திய அரசின் பதிலை எதிர்பார்க்கிறேன்“ என்று கூறி உள்ளார்.

அத்துடன் இந்த விவகாரத்தில் கடந்த கால நிகழ்வுகளை பற்றி பேசாமல் தற்போதைய பிரச்சினையில்தான் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Next Story