‘கொரோனாவுக்கான தடுப்பூசி மலிவாக இருக்க வேண்டும்’ - மருத்துவ நிபுணர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்


‘கொரோனாவுக்கான தடுப்பூசி மலிவாக இருக்க வேண்டும்’ - மருத்துவ நிபுணர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 30 Jun 2020 11:18 PM GMT (Updated: 30 Jun 2020 11:18 PM GMT)

கொரோனாவுக்கான தடுப்பூசி மலிவாகவும், சர்வதேச சிறப்புடையதாகவும் இருக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

புதுடெல்லி,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியோ, மருந்துகளோ இல்லாததால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே இந்த ஆட்கொல்லிக்கு எதிராக விரைவில் தடுப்பூசியை உருவாக்க சர்வதேச அளவில் விஞ்ஞானிகளும், மருத்துவ நிபுணர்களும் தீவிர ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த அவசரம் மற்றும் அத்தியாவசிய பணியில் இந்தியாவின் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களும் ஏற்கனவே களமிறங்கி உள்ளனர். இந்த பணிகளை மத்திய அரசும் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கும் திட்டம் மற்றும் பணிகளை பிரதமர் மோடி நேற்று ஆய்வு செய்தார். இது தொடர்பாக நடந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள், இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்பு பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து பிரதமரிடம் விளக்கினர்.

அப்போது கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவின் உறுதிப்பாட்டை நிபுணர்களுக்கு விளக்கிய பிரதமர் மோடி, அவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

குறிப்பாக இந்தியாவின் பரந்த மற்றும் மாறுபட்ட மக்கள்தொகைக்கு தடுப்பூசி போடுவது, மருத்துவ வினியோகச் சங்கிலிகளை நிர்வகித்தல், ஆபத்தில் உள்ள மக்களுக்கு முன்னுரிமை அளித்தல், செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பு, தனியார் துறை ஆகியவற்றின் பங்கு உள்ளிட்டவற்றை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

மேலும் இந்த தேசிய முயற்சிக்கு அடிப்படையாக 4 வழிகாட்டல் கொள்கைகளையும் பிரதமர் மோடி விளக்கினார். அதன்படி முதலாவதாக, பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், மருத்துவம் சாராத கொரோனா போராளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இரண்டாவதாக, தடுப்பூசி பெறுவதற்கு எந்தவொரு கட்டுப்பாடும் விதிக்காமல், எவரும், எங்கேயும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும். மூன்றாவதாக, கொரோனாவுக்கான தடுப்பூசி மலிவானதாகவும், சர்வதேச சிறப்புடையதாகவும் இருக்க வேண்டும். அத்துடன் யாரும் விடுபடாமலும் பார்க்க வேண்டும்.

நான்காவதாக, தடுப்பூசி உற்பத்தி முதல் பயன்பாடு வரையிலான அனைத்து நடவடிக்கைகளையும் நவீன தொழில்நுட்பம் மூலம் சரியான நேரத்தில் கண்காணிக்கப்பட்டு ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.

மேலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் சரியான நேரத்தில் சிறப்பான தடுப்பூசி போடுவது என்ற தேசத்தின் முயற்சிகளுக்கு முதுகெலும்பாக அமைந்திருக்கும் தொழில்நுட்ப வாய்ப்புகளை சரியாக ஆராய வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி இத்தகைய பெரிய அளவிலான தடுப்பூசி நடவடிக்கைகளுக்கான விரிவான திட்டமிடலை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த தகவல்கள் அனைத்தும் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story