உத்தர பிரதேச ரவுடி விகாஷ் துபேவின் கூட்டாளி கைது


உத்தர பிரதேச ரவுடி விகாஷ் துபேவின் கூட்டாளி கைது
x
தினத்தந்தி 5 July 2020 8:53 AM GMT (Updated: 5 July 2020 8:53 AM GMT)

உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபேவின் கூட்டாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் நகரம் அருகே உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் துபே என்ற ரவுடி இருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை   போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த விகாஸ் துபேயை தேடி  டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் போலீசார், குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர்.

அப்போது, ரவுடி விகாஸ் துபே தலைமையிலான கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 8 போலீசார் கொல்லப்பட்டனர்.  படுகாயம் அடைந்த மேலும் ஏழு போலீசார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மட்டும் இல்லாது நாடு முழுதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு, அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து விகாஸ் துபேவை கைது செய்யும் பணியில் உத்தர பிரதேச போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விகாஷ் துபேயையும்,அவரது ஆதரவாளர்களையும் பிடிக்க, 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.  விகாஸ் துபே பற்றி தகவல் தருவோருக்கு, 50 ஆயிரம் ரூபாய் பரிசு தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய, 500 மொபைல் போன் எண்களை கண்காணித்து, அவற்றுக்கு வரும் அழைப்புகளை  ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

விகாஸ் துபேயின் கூட்டாளி தயா சங்கர் அக்னிஹோத்ரி (வயது 42) கல்யான்பூர் என்ற பகுதியில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்து கைது செய்ய முயற்சி செய்தனர். அப்போது அவர் தப்பியோட முயற்சி செய்துள்ளார். போலீசார் அவரின் காலில் சுட்டு பிடித்துள்ளனர்

Next Story