ஸ்பானிஷ் ப்ளூவை தொடர்ந்து கொரோனாவில் இருந்தும் தப்பிய 106 வயது முதியவர்


ஸ்பானிஷ் ப்ளூவை தொடர்ந்து கொரோனாவில் இருந்தும் தப்பிய 106 வயது முதியவர்
x
தினத்தந்தி 5 July 2020 1:32 PM GMT (Updated: 5 July 2020 1:32 PM GMT)

டெல்லியில் 106 வயது நிறைந்த முதியவர் ஒருவர் ஸ்பானிஷ் ப்ளூவை தொடர்ந்து கொரோனாவில் இருந்தும் விடுபட்டு ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, கடந்த 1918ம் ஆண்டு உலகம் முழுவதும் 4 கோடி பேர் ஸ்பானிஷ் ப்ளூவுக்கு பலியாகினர் என தெரிவித்து உள்ளது.  உலக பாதிப்பில் 5ல் ஒரு பங்கு மக்கள் இந்தியாவில்
பலியாகினர் என நம்பப்படுகிறது.  எனினும், இந்தியாவில் இறப்பு விகிதம் பற்றிய விவாதம் தொடர்ந்து கொண்டு இருந்தது.

இதேபோன்று, சமீபகால வரலாற்றில் கடுமையான நோய் தொற்றாக ஸ்பானிஷ் ப்ளூ அறியப்படுகிறது.  எச்1என்1 வைரசால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்து உள்ளது.  102 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட இதன் பாதிப்புக்கு உலகில் 3ல் ஒரு பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு இந்தியா முழுவதும் தீவிரமடைந்து உள்ளது.  நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.  அவற்றை தடுக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.

டெல்லியில் வசித்து வரும் 106 வயது முதியவர் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.  இவரது 70 வயது மகனுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனையடுத்து, கொரோனா மையத்தில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  தொடர்ந்து அளித்து வந்த சிகிச்சையில் இருவருக்கும் முன்னேற்றம் ஏற்பட்டது.

கடந்த 1918ம் ஆண்டு உலகம் முழுவதும் ஸ்பானிஷ் ப்ளூ நோய் பாதிப்பு ஏற்படும்பொழுது, முதியவருக்கு 4 வயது ஆகியிருந்தது.  இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அவர் அதிலிருந்து முழு அளவில் விடுபட்டு உள்ளார்.  இதேபோன்று அவரது மனைவி மற்றும் மற்றொரு குடும்ப உறுப்பினர் என 4 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர்.  தனது மகனை விட முதியவர் வெகுவிரைவில் குணமடைந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Next Story